மும்பை: இந்திய அணி அடுத்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் சர்பராஸ் கான் பெயர் இடம்பெறவில்லை. அவர் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்தார்.
அதன் பிறகு காயம் ஏற்பட்டிருந்ததால், உள்ளூர் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அவர் ஆர்வமாக இருந்தார், ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவரது இடத்தில் கருண் நாயர் இடம் பெற்றிருக்கிறார். அவர் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சர்பராஸ் கான் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என விவரித்து இருக்கிறார். "இது மிகவும் கடினமான முடிவு; ஆனால் இதுதான் கிரிக்கெட். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது உங்களது இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்."
"நீங்கள் ஒரு சதம் அடித்தாலும், அடுத்த இன்னிங்ஸில் அந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது. முந்தைய இன்னிங்ஸில் சதம் அடித்தோம் என நினைத்து இருக்கக் கூடாது. உங்கள் பார்வை எப்போதும் ஆட்டத்தின் மீதே இருக்க வேண்டும்; மேலும் ரன்களைக் குவிக்க வேண்டும் என நினைக்க வேண்டும். மற்றவர்களுக்கு வாய்ப்பளித்து, உங்களை நீங்களே அணியிலிருந்து வெளியே தள்ளிக்கொள்ளக் கூடாது. அணியில் உங்கள் வாய்ப்பைத் தக்க வைப்பது என்பது முற்றிலும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து கதவைத் தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்; கதவுகளை உடைத்து எறிய வேண்டும்."
"ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு இந்திய அணி எந்த டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. ரஞ்சி டிராபி இருந்தது, ஆனால் சர்பராஸ் கான் அப்போது காயம் அடைந்திருந்தார். அதனால் அதில் விளையாடவில்லை. எனவே, அவரது பேட்டிங் ஃபார்ம் எப்படி இருக்கிறது என அவரால் நிரூபிக்க முடியவில்லை. நீங்கள் அணியில் இருந்து நீக்க முடியாத வீரராக உங்களை மாற்ற வேண்டும். இதற்கு முன்பும் நாம் இதுபோல நடந்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஒரு தொடரில் அணி தோற்றுவிட்டால், 13-வது, 14-வது மற்றும் 15-வது வீரர்களை அணியில் இருந்து நீக்குவார்கள். எனவே, உங்கள் வாய்ப்புகளை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்."
"ஜெயதேவ் உனட்கட் ஒரு நல்ல உதாரணம். அவர் முதல் போட்டியில் மிக இளம் வயதில் விளையாடினார். அதன் பிறகு 13 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டே இருந்தார். ஜெயதேவ் உனட்கட்டைப் போலவே கருண் நாயர் தொடர்ந்து பெரிய சதங்களை அடித்துக் கொண்டே இருந்தார். அதனால்தான் தேர்வு குழு அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்திருக்கிறது. ஒரு பேட்ஸ்மேன் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்றால், அவரை நம்பி நாம் பந்தயம் கட்டலாம். அவர் ரன்கள் குவிக்கிறார், கவுண்டி சாம்பியன்ஷிப்பிலும் அனுபவம் உள்ளது. எனவே, அவரை மீண்டும் இந்திய கிரிக்கெட்டுக்கு அழைத்தது ஒரு நல்ல முடிவு," என்றார் சுனில் கவாஸ்கர்.