லண்டன்: இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான் சேர்க்கப்படாதது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கான் இடம்பெறவில்லை. அவர் இதற்கு முந்தையத் தொடர்களில் நன்றாகவே ஆடியிருந்தாலும், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஒரு மாற்று வீரராகவே கடைசி வரை இருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் அணியிலேயே தேர்வு செய்யப்படவில்லை.
அதே சமயம், இந்திய டெஸ்ட் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சர்பராஸ் கான் அதிரடியாக ஆடி 76 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்தார். அதற்கு முன் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 92 ரன் சேர்த்து இருந்தார். இதை அடுத்து, சசி தரூர், சர்பராஸ் கானை அணியில் சேர்க்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

"எந்த ஒரு தேர்வாளராக இருந்தாலும் இந்திய அணியை தேர்வு செய்வது சிரமம் தான். அனைவருக்கும் சில விருப்பங்கள் அங்கு இருக்கும். உள்நாட்டு அளவில் இளம் வீரரான சர்பராஸ் கான் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆனால், ஆஸ்திரேலியாவில் அவருக்குப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இங்கிலாந்து பயிற்சிப் போட்டியில் அவருக்கு ஒரு இன்னிங்ஸில் வாய்ப்பு அளிக்கப்பட்டபோது, 90 ரன்களுக்கும் அதிகமாக எடுத்தார். அடுத்த பயிற்சிப் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் இந்திய அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் போது சதம் அடித்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இப்படி தரமான வீரராக இருக்கும் ஒருவரை எதற்காக அணியில் இருந்து நீக்குகிறீர்கள்? இது எந்த வகையிலும் புத்திசாலித்தனமாக எனக்குப் படவில்லை.
ரோகித் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரை அடுத்தடுத்து நாம் இழந்து இருக்கிறோம். இந்த நிலையிலாவது மற்றவர்களுக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும். இளம் வீரர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். அதிலும் சர்பராஸ் கான் போல கிடைத்த வாய்ப்புகளில் மீண்டும் மீண்டும் நிரூபித்தவர்களை நாம் அதிகம் கவனிக்க வேண்டும். அவரை நான் அதிக அளவில் போட்டிகளில் பார்க்க விரும்புகிறேன்.
ரோகித் சர்மா கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகிறார். ஆனால் விராட் கோலி ஓய்வு பெற்றது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் நல்ல உடல் தகுதியோடு இருந்தார். இன்னும் பல ஆண்டுகள் ஆடும் அளவுக்கு அவர் இருந்தார்" என்றார் சசி தரூர். சர்பராஸ் கானின் தேர்வு புறக்கணிக்கப்பட்டது குறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.