மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் இளம் நட்சத்திர வீரர் சர்பராஸ் கான் உடல் எடையை காரணம் காட்டி அவரை அணியிலிருந்து தேர்வு குழுவினர் நீக்கினர். இதனை அடுத்து சர்பராஸ் கான் 17 கிலோ உடல் எடையை குறைத்த பின்பும், அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படவில்லை.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி 92 ரன்கள் சேர்த்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுவரை 6 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள சர்பராஸ் கான் ஒரு சதம் உட்பட 371 ரன்கள் குவித்து இருக்கின்றார்.

இந்த நிலையில் ஓய்வு நேரத்தில் வீட்டில் சும்மா உட்கார்ந்து கொள்ளாமல், சச்சின், கவாஸ்கர் ஆகியோர் பின்பற்றிய வழி ஒன்றை சர்பராஸ் கான் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதாவது மும்பையில் மழை காலத்தில் ஜூலை மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை கங்கா லீக் என்ற ஒரு தொடர் நடைபெறும்.
ஒரு காலத்தில் இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர் ஆகியோர் ஓய்வு நேரத்தில் விளையாடி இருக்கின்றார்கள். ஆனால் சமீப காலமாக ஸ்டார் வீரர்கள் யாரும் இந்த தொடர் பக்கம் திரும்பி பார்ப்பது கிடையாது. இப்படி புகழ் பெற்ற கங்கா லீக் தொடரை சர்பராஸ்கானும் தனது ஓய்வு நேரத்தில் ஆடி இருக்கின்றார்.
குறிப்பாக போட்டி தொடங்குவதற்கு முன்பே மைதானத்திற்கு சென்று தீவிர பயிற்சி எடுத்துக் கொண்டு போட்டியில் விளையாடியுள்ளார். அண்மையில் கூட இஸ்லாம் ஜிம்கானா என்ற அணிக்கு எதிராக சர்பராஸ் கான் 42 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து இருக்கின்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்பராஸ் கான்,"நான் சிறுவனாக இருக்கும்போதே இந்த தொடரில் கவாஸ்கர் விளையாடிய கதைகள் குறித்து என்னுடைய தந்தை நவ்சாத் கான் கூறியிருக்கின்றார்."
"நாங்கள் இங்கிலாந்தில் இருந்து மும்பைக்கு திரும்பிய காலையிலே நேராக இந்த தொடருக்கு சென்று விளையாடினோம். ஏனென்றால் இந்த போட்டியில் விளையாடுவதை ஒரு கௌரவமாக நினைக்கின்றோம். நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொடரில் விளையாடினேன். அப்போது இந்த தொடரில் ரெக்கார்ட் புத்தகத்தை பார்த்தபோது 2018 ஆம் ஆண்டு நான் இங்கு சதம் அடித்ததை கண்டேன். அது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. என்னைப் பொறுத்தவரை மும்பையைச் சேர்ந்த ஸ்டார் வீரர்கள் அனைவரும் கங்கா லீக் தொடரில் விளையாட வேண்டும்."
"சிலர் இந்த தொடரில் விளையாடி தோற்றுப் போனால் அது எதிர்காலத்தை பாதிக்கும் என்று நினைக்கிறார்கள். சச்சின் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் இவ்வாறு நினைத்து இருந்தால் இந்நேரம் அவர்கள் ஜாம்பவான்களாக மாறி இருக்க முடியாது. இந்த தொடரில் பெரிய ஸ்டார் வீரர்கள் பங்கேற்பதன் மூலம் மற்ற இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என நினைக்கின்றேன். இந்த கங்கா லீக் தொடரில் ரன்களை சேர்த்தால் உலகத்தில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் ரன்கள் சேர்க்கலாம்" என்று சர்பராஸ் கான் கூறியுள்ளார்.