மும்பை : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடர் வரும் நவம்பர் மாதம் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தொடருக்கு முன்பு இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. பொதுவாக இந்திய அணி வெளிநாட்டு தொடர் செல்லும் போதெல்லாம் பிரதான டெஸ்ட் வீரர்களை இந்திய ஏ அணியில் அனுப்பி பயிற்சி ஆட்டங்களில் பிசிசிஐ பங்கேற்க வைக்கும்.

அந்த வகையில் இந்திய ஏ அணியில் சர்ஃபராஸ்கான், கில், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் இடம்பெற்று இருக்க வேண்டும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு முன்கூட்டியே சென்று இந்த வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று அங்கு இருக்கும் ஆடுகளங்கள் குறித்து ஒரு அளவுக்கு தெரிந்திருப்பார்கள். குறிப்பாக சர்ஃபிராஸ் காணும், ஜெய்ஷ்வாலும் இதுவரை எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவில் விளையாடியது இல்லை.
இதனால் பிசிசிஐ இந்த இருவரையாவது இந்திய அணியில் அனுப்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இந்திய ஏ அணியில் ருதுராஜ், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற வீரர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் இரண்டாம் தர இந்திய அணியில் இருக்கக்கூடிய வீரர்கள். மெயின் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் ருதுரஜ் அல்லது அபிமன் யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால் மெயின் அணி வீரர்களில் பலரும் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் இந்திய ஏ அணி தேர்வில் தவறு நடந்திருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் 24ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் நவம்பர் ஒன்றாம் தேதியும் தொடங்குகிறது.
இந்தத் தொடர் நவம்பர் 5ஆம் தேதி முடிவடைகிறது. இந்த சூழலில் இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 31ஆம் தேதி முதல் பயிற்சி ஆட்டத்திலும் நவம்பர் 7ஆம் தேதி இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலும் விளையாடுகிறது. இதனால் சர்ஃபராஸ் கான், கில், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பது என்பது முடியாத காரியம்.
இதனால் இந்த வீரர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் ஓய்வு அளிக்கப்பட்டு அதன் பின் நவம்பர் 10 அல்லது 12ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு செல்வார்கள். அப்போது நவம்பர் 15 ஆம் தேதி மூன்றாவது பயிற்சி ஆட்டம் இந்திய ஏ அணியுடன் நடைபெறுகிறது. அதில் சர்ஃபராஸ் கான், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடுவார்கள் என தெரிகிறது. இதனால் தற்போது இந்திய ஏ அணியில் சஃர்பராஸ் கான் தேர்வு செய்யப்படாததற்கு அவர் நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய போட்டியில் அணியில் இடம் பெறுவார் என்பதே காரணம் என கூறப்படுகிறது.