மும்பை: சர்பராஸ் கான், விஜய் ஹசாரே டிராபி தொடரில் கோவாவுக்கு எதிராக 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்து அவர் அசத்தினார். புதன்கிழமை நடந்த இப்போட்டியில் மும்பை அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் விஜய் ஹசாரே எலைட் குரூப் C பிரிவில் மும்பை அணி முதலிடத்தில் தொடர்கிறது.
சர்பராஸ் கானின் இந்த சதம், இந்திய சீனியர் அணியில் அவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்பெற செய்துள்ளது. தனது சதம் குறித்து பேசிய சர்பிராஸ், "நான் களமிறங்கும் போது, ரன் ரேட் அதிகமாக இல்லை. ஏனெனில், எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் முக்கியமான முதல் ஒரு மணி நேர பவுலிங்கைசிறப்பாகச் சமாளித்தனர்"

"நான் முதலில் பொறுமையை கடைபிடித்தேன். பிறகு, பிட்ச் சீரானதும் ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கினேன். முடிந்தவரை அதிக ரன்களைக் குவித்து, வலுவான இலக்கை நிர்ணயிப்பதே எங்கள் திட்டம்.நான் பல ஒருநாள் போட்டிகளில் ஆடியிருப்பதால், ஓர் இன்னிங்ஸை எப்படிச் சரியாக கட்டமைக்க வேண்டும் என எனக்குத் தெரியும்."
"எனக்கு நல்ல ஸ்வீப், கட் ஷாட்கள் ஆட தெரியும். இப்போட்டி வடிவில், 5க்கும் மேற்பட்ட பீல்டர்கள் வெளிவட்டத்தில் இல்லாததால், சுதந்திரமாக ஷாட்களை ஆடுகிறேன். ஒரே ஆட்டத்தில் நானும், தம்பி முஷிர் கானும் சதம் எடுக்க வேண்டும் என்பது எங்கள் கனவு. இன்று முஷீர் மிகச் சிறப்பாக விளையாடியபோது அது நடக்கும் என்று நான் நம்பினேன்."
"ஆனால், கனவுகள் இவ்வளவு சீக்கிரம் நனவாவதில்லை" என்று சர்பராஸ் கான் தனது ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொண்டார். சர்பிராஸ் கான் தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். சர்பிராஸ் கானை, வரும் ஜனவரி 11ஆம் தேதி தொடங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.