சம்பவம்.. அடுத்தடுத்து 2 சதங்களை விளாசிய சர்பராஸ் கான்.. இனியாவது கம்பீர் வாய்ப்பு அளிப்பாரா?
சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரரான சர்ஃபராஸ் கான் அடுத்தடுத்து 2 சதங்களை விளாசி தனது ஃபார்மை நிரூபித்துள்ளார். இதனால் மீண்டும் இந்திய அணியில் சர்ஃபராஸ் கானுக்கு தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் வாய்ப்பு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டவர் சர்ஃபராஸ் கான். அதன்பின் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய சர்ஃபராஸ் கான், ஒரு சதம் மற்றும் 3 அரைசதம் உட்பட 371 ரன்களை விளாசி இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது.

இதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியா மண்ணில் ஆடிய ஒரு போட்டியில் கூட சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவே இல்லை.
இது இந்திய ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றது. ஆனால் மனம் தளராத சர்ஃபராஸ் கான், உடனடியாக தனது ஃபிட்னஸில் கவனம் செலுத்த தொடங்கினார். சுமார் 15 கிலோ எடை வரை குறைத்தார். இந்த நிலையில் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு சர்ஃபராஸ் கான் திரும்பி இருக்கிறார். புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.
முதல் போட்டியிலேயே தமிழ்நாடு அணிக்கு எதிராக ஆடிய சர்ஃபராஸ் கான், 138 ரன்கள் விளாசி கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தார். தொடர்ந்து ஹரியானா அணிக்கு எதிரான போட்டியில் ஆடி வரும் சர்ஃபராஸ் கான், 99 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். சிறப்பாக ஆடிய அவர் 111 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
2 போட்டிகளில் அடுத்தடுத்து சர்ஃபராஸ் கான் சதம் விளாசிய நிலையில், ரசிகர்கள் இந்திய அணி பக்கம் திரும்பி இருக்கின்றனர். இம்முறையாவது சர்ஃபராஸ் கானை இந்திய அணிக்குள் கொண்டு வந்து தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வாய்ப்பு கொடுப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications