ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் சர்பராஸ் கான், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 'லிஸ்ட் ஏ' எனப்படும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில், அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
வியாழக்கிழமை (ஜனவரி 8, 2026) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த அவர், வெறும் 15 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை (எலைட் குரூப் சி) போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் 217 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடியது.

களமிறங்கியது முதலே அதிரடியாக ஆடிய சர்பராஸ் கான், பஞ்சாப் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அபிஷேக் சர்மா வீசிய ஒரே ஓவரில் 30 ரன்களை (3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாசினார். இதன் மூலம் வெறும் 15 பந்துகளில் அரைசதத்தைக் கடந்து, இதற்கு முன்பு அதித் ஷேத் வசம் இருந்த 16 பந்துகளில் அரைசதம் அடிக்கப்பட்ட சாதனையை முறியடித்தார்.
இந்தப் போட்டியில் சர்ஃபராஸ் கான் 20 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 310 என்பதாக இருந்தது.
சர்பராஸ் கானின் இந்த அதிரடி ஆட்டம் மும்பையை வெற்றிக் கோட்டிற்கு அருகே கொண்டு சென்றது. ஆனால், மயங்க் மார்கண்டேவின் சுழலில் சர்பராஸ் 62 ரன்கள் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்கள் குவித்தனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து ஆடாமல் விக்கெட்டை இழந்தது மும்பைக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. இறுதியில், மும்பை அணி 26.2 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, வெறும் 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.
பஞ்சாப் தரப்பில் மயங்க் மார்கண்டே மற்றும் குர்னூர் ப்ரார் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி குரூப் சி பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.