தண்டனை பெற்ற ஹபீஸ்
பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் ஆல்-ரவுண்டராக இருக்கிறார். அவரது சுழற்பந்து வீசும் முறை தவறாக இருப்பதாக முன்பு ஐசிசி-யால் பல முறை தண்டனை பெற்று இருக்கிறார். கிரிக்கெட்டில் ஒரு வீரர் பந்துவீசும் போது பந்து அவரது தோள்பட்டைக்கு மேல் இருந்து வெளியேற வேண்டும். ஹபீஸ் பந்து வீசும் போது பல முறை தோள்பட்டைக்கு கீழே இருந்து பந்து வெளியேறுமாறு வீசி இருக்கிறார். அதற்கு தண்டனையும் பெற்று விட்டார்.
சைகை செய்த ராஸ் டெய்லர்
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹபீஸ் வீசிய பந்து தவறாக வீசப்பட்டதாக, நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் கருதியுள்ளார். அதனால், இரண்டு, மூன்று முறை ஹபீஸ் பந்து வீசி முடித்த உடன் ராஸ் டெய்லர் தோள்களுக்கு கீழே இருந்து பந்து வீசியதைப் போல சைகை செய்தார்.
புகார் அளித்த சர்ப்ராஸ்
இதனால், பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மத் கோபமடைந்து ராஸ் டெய்லர் மற்றும் அம்பயர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போட்டி முடிந்த நிலையில், ராஸ் டெய்லர் மீது சர்ப்ராஸ் புகார் அளித்துள்ளார்.
அம்பயரிடம் சென்று பேசலாம்
இது பற்றி பேசிய சர்ப்ராஸ், "ராஸ் டெய்லரின் செய்கை தவறானது. அது அவரது வேலையல்ல. அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்துவது நல்லது. அவருக்கு ஏதாவது பிரச்சனையாக இருந்தால் தொலைக்காட்சியில் தெரிவது போல சைகை செய்யாமல், அம்பயரிடம் சென்று பேசலாம். ஹபீஸின் பந்துவீச்சில் எந்த தவறும் இல்லை. எந்த காரணமும் இல்லாமல் அந்த பேட்ஸ்மேன் பிரச்சனை செய்ய நினைக்கிறார்" என கூறினார்.