
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக 2011 முதல் சீனிவாசன் பதவி வகித்து வருகிறார். ஐபிஎல் பெட்டிங் விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கியதால் அவர் தற்காலிகமாக தலைவர் பதவியில் இருந்து 'ஒதுங்கி' இருந்தார். அத்துடன் இந்த பெட்டிங், பிக்சிங் தொடர்பாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்தியது.
விசாரணையின் முடிவில் குருநாத் மெய்யப்பன் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை என்றது. ஆனால் இந்த விசாரணை குழுவை நிராகரித்தது மும்பை நீதிமன்றம்.
இந்நிலையில் சீனிவாசனின் பதவிக் காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. சென்னையில் வரும் 29-ந் தேதி கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தாம் போட்டியிடுவேன் என்று சீனிவாசன் அறிவித்தும் இருந்தார்.
இதனிடையே பீகார் கிரிக்கெட் சங்கம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில் சீனிவாசன் 29-ந் தேதி பொதுக்குழுவைக் கூட்டவும் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடவும் தடை கோரப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் முடிவில் கிரிக்கெட் வாரிய பொதுக்குழுவைக் கூட்டவும் சீனிவாசன் தேர்தலில் போட்டியிடவும் உச்சநீதிமன்றம் அனுமதித்தது. அதே நேரத்தில் தேர்தலில் வென்றாலும் சீனிவாசன் பதவி ஏற்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.