ராஞ்சி: சென்னை அணியின் கேப்டன் தோனி மகள் ஸிவாவின் பள்ளிக் கட்டணம் பற்றி தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி. இவர் 2007ஆம் ஆண்டில் சாக்ஷியுடன் காதலில் இருந்து வந்த நிலையில், 2010ஆம் ஆண்டு குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து தோனி - சாக்ஷி இருவரும் நட்சத்திர தம்பதிகளாக இந்தியாவில் வலம் வர தொடங்கினர்.

இவர்களுக்கு 2015ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அப்போது ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பைத் தொடரில் விளையாடிய தோனி, உலக்கோப்பைத் தொடரில் தோல்வியடைந்த பின்னரே மகளை பார்க்க வந்தார். இன்றும் தோனி கூறிய, I am on National Duty என்ற பதில் ரசிகர்களிடையே பிரபலமாக பகிரப்படும்.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கு தோனி தனது மகள் ஸிவாவை அழைத்து வரத் தொடங்கினார். இதனால் நாளுக்கு நாள் தோனிக்கு எப்படி ரசிகர்கள் உயர்ந்து வந்தார்களோ, அதேபோல் ஸிவாவுக்கு ரசிகர்கள் உயர்ந்தனர். சிறிய வயதிலேயே மில்லியன் கணக்கில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கொண்டுள்ளார் ஸிவா.
மைதானத்தில் தோனியுடன் ஸிவா அடிக்கும் லூட்டிக்கு எல்லையே இல்லை என்ற நிலை தான் ஒவ்வொரு ஐபிஎல் தொடருக்கும் இருக்கும். இந்த நிலையில் 9 வயதாகும் ஸிவா, ராஞ்சியில் உள்ள பிரபல டாரியன் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தோனி மகளின் பள்ளிக் கட்டணம் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்பள்ளியில் ஆண்டு கட்டணமாக ரூ.2.75 லட்சம் வசூல் செய்யப்படுகிறது.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.23 ஆயிரம் பள்ளி கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. அதேபோல் பள்ளியின் போர்டிங் திட்டத்தில் ஸிவா இணைந்திருந்தால் ரூ.4.40 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி மகளின் பள்ளிக் கட்டணம் பற்றிய தகவல்கள் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.