நாக்பூர்: அணிகள் இணைந்தன, மனங்கள் இணைந்தனவா' என்ற சந்தேகம் வரலாம். ஆனால், நாக்பூரில் நாளை துவங்கும் டெஸ்ட் போட்டியில் பட்டையக் கிளப்ப போவது யார் என்றால்.....
மூன்று டெஸ்ட்கள், மூன்று ஒருதினப் போட்டிகள், மூன்று டி-20 போட்டிகளில் விளையாட, இலங்கை கிரிக்கெட் அணி வந்துள்ளது. இதில் கோல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் டிராவானது. இரண்டாவது டெஸ்ட் நாக்பூரில் நாளை துவங்குகிறது.

தொடர்ந்து, எட்டு டெஸ்ட் போட்டித் தொடரை வென்று, உலகத் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இந்தாண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், இலங்கைக்கு பயணம் செய்த இந்திய அணி, 3 டெஸ்ட்கள், 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் என, அனைத்திலும் வென்று, ஒயிட்வாஷ் செய்தது.
கோல்கத்தா டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக பாதிக்கப்பட்டதால், டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் இடையே இந்தியாவில் நடந்துள்ள 18 டெஸ்ட் போட்டிகளில் 10ல் இந்தியா வென்றுள்ளது. 8 டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டியில் கூட இலங்கை வென்றதில்லை.
இந்த நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் நாளை துவங்குகிறது. கோல்கத்தாவைப் போலவே, ஆடுகளம் பசுமையாக இருப்பதால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நாக்பூர் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலகத்தாவில் இலங்கையின் 17 விக்கெட்களையும் வேகப்பந்து வீச்சாளர்களே சாய்த்தனர். திருமணத்துக்காக புவனேஷ்வர் குமார் லீவில் சென்றுள்ளதால், இஷாந்த் சர்மா விளையாடுவதற்கு வாய்ப்பு உள்ளது. முகமது ஷமி, உமேஷ் யாதவ் கடந்த போட்டியில் அசத்தினர்.
நாக்பூரில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்பதால், நாளை துவங்கும் டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக முடிவு ஏற்படும். நாளை நமது, நாக்பூர் நமதே.