அலூர்: இந்திய பெண்கள் டி-20 சாலஞ்சர்ஸ் கோப்பை போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் புளு அணி இரண்டாவது வெற்றியைப் பெற்றது. இன்று நடந்த ஆட்டத்தில் கிரீன் அணியை 46 ரன்களுக்கு சுருட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் புளு வென்றது.
இந்திய பெண்கள் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் டி-20 சாலஞ்சர்ஸ் கோப்பை போட்டி கர்நாடக மாநிலம் அலூரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா ரெட், இந்தியா புளு, இந்தியா கிரீன் என மூன்று அணிகள் பங்கேற்கின்றன.
இன்று நடந்த ஆட்டத்தில் வேதா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான இந்திய பெண்கள் கிரீன் அணியும், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் புளு அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கிரீன் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிரத்யுஷா 18, சுஷ்மா வர்மா 14 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். நான்கு பேர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
புளு அணியின் அனுஜா படேல், பிரீத்தி போஸ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய புளு அணி 9.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது. தானியா பாட்டியா 29, தயாளன் ஹேமலதா 13 ரன்கள் எடுத்தனர்.
இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் புளு அணி வென்றது. முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த புளு, தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் வென்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.