லாகூர்: ஒருபுறம் 31-வது பிறந்தநாள் கொண்டாட்டம், மறுபுறம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் வெற்றி என பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னணி வீரர் பாபர் அசாமுக்கு புதன்கிழமை ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது. ஆனால், இந்த இரட்டை மகிழ்ச்சிக்கு நடுவே, ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமும் நடந்தது.
பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நான்காம் நாளில், பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது, பாபர் அசாமின் 31-வது பிறந்தநாளில் கிடைத்த ஒரு சிறந்த பரிசாக அமைந்தது.
வெற்றிக்குப் பிறகு, கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில், ஒரு இளம் ரசிகர், மைதானத்தின் 'மஜித் கான் என்க்ளோசர்' (Majid Khan Enclosure) வழியாகத் தாவி ஏறி, சற்றும் பதற்றமின்றி, சாதாரணமாக பாகிஸ்தான் அணியின் டிரெஸ்ஸிங் ரூமை நோக்கி நடந்து வந்துள்ளார். அவரது நோக்கம், பிறந்தநாள் நாயகன் பாபர் அசாமை நேரில் சந்திப்பதே. ஆனால் , நடந்ததோ வேறு.

டிரெஸ்ஸிங் ரூமிற்கு வெளியே நின்று கொண்டிருந்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள், அந்த ரசிகரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்து, உடனடியாகப் பாதுகாப்பு அதிகாரிகளை எச்சரித்தனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த அந்த ரசிகர், அங்கிருந்து தப்பிக்க முயன்றார். முதலில், தான் ஏறி வந்த அதே என்க்ளோசர் வழியாகக் கீழே இறங்க முயன்றார்.
ஆனால், அங்கும் பாதுகாப்பு அதிகாரிகள் நிற்பதைக் கண்டார். வேறு வழியின்றி, மீண்டும் பயிற்சியாளர்களை நோக்கி வந்து, தன்னை மன்னிக்குமாறும், காப்பாற்றுமாறும் கெஞ்சியுள்ளார். அதற்குள், பாதுகாப்பு அதிகாரிகள் சரியான நேரத்தில் தலையிட்டு, அந்த ரசிகரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் நடந்தபோது, பாபர் அசாம் டிரெஸ்ஸிங் ரூமில் இல்லை. பின்னர், பயிற்சியாளர்கள் இந்தச் சம்பவம் குறித்து அவரிடம் தெரிவித்தபோது, அதைக் கேட்டு அவர் அதிர்ச்சியில் உறைந்து, பேச்சிழந்து போனார் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் பாபர் அசாம் மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பினால் இந்தச் சம்பவம் நடந்து இருந்தாலும், இது ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடியாகவே பார்க்கப்படுகிறது.
இந்த மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வமான கருத்தையும் வெளியிடவில்லை. பாபர் அசாமின் பிறந்தநாள் கொண்டாட்டமும், டெஸ்ட் வெற்றியும், இந்த ஒரு பாதுகாப்பு குளறுபடியால் பெரிதாக பாதிக்கப்படவில்லை.
இந்தப் போட்டியில், கடினமான ஆடுகளத்தில், இரண்டாவது இன்னிங்ஸில் பாபர் அசாம் அடித்த 42 ரன்கள்தான், பாகிஸ்தான் அணி 277 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயிக்க உதவியது. பந்துவீச்சில், முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய நோமன் அலி, இரண்டாவது இன்னிங்ஸிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்குத் துணையாக, வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடியும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, தென்னாப்பிரிக்காவை 183 ரன்களுக்குச் சுருட்டினர். இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் அக்டோபர் 20 அன்று ராவல்பிண்டியில் தொடங்குகிறது.