காபூல்: ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் காபூல் பிரீமியர் லீக் போட்டியில் ஒரே ஓவரில் 48 ரன்கள் விளாசப்பட்ட அதிசயம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட், உத்தரப் பிரதேச சுழற்பந்துவீச்சாளர் சிவம் சிங் வீசிய ஓவரில், 43 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். அதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரர் ஜடேஜா ஆர்சிபி அணியின் ஹர்சல் படேல் வீசிய ஓவரில் 37 ரன்கள் விளாசி சாதனை படைத்தார்.

இவர்கள் அனைவருக்கும் முன்பாக இந்திய அணிக்காக யுவராஜ் சிங் இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி 36 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். இப்போதும் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடிக்கப்பட்டால், முதலில் நினைவுக்கு வருவது யுவராஜ் சிங்கின் ஆட்டம் தான். அந்த அளவிற்கு யுவராஜ் சிங் ருத்ரதாண்டவம் ஆடி இருப்பார்.
இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் காபூல் பிரிமீயர் லீக் தொடரின் ஒரு போட்டியில் ஒரே ஓவரில் 48 ரன்கள் விளாசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷாகின் ஹண்டர்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் அபாசின் டிஃபெண்டர்ஸ் அணி விளையாடியது. இதில் அதிரடி வீரர் செதிக்குல்லா அடல் பேட்டிங் செய்த போது, 19வது ஓவரை சுழற்பந்துவீச்சாளரான அமிர் சசாய் வீசினார்.
இவர் வீசிய முதல் பந்திலேயே அடல் சிக்சர் விளாச, அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் வீசப்பட்ட பந்தில் ஒய்டு பவுண்டரி செல்ல, முதல் பந்தை வீசுவதற்கு முன்பாகவே 12 ரன்களை அமிர் சசாய் வழங்கினார். பின்னர் வீசப்பட்ட 6 பந்திலும் 6 சிக்சர்கள் அடிக்கப்பட, மொத்தமாக 48 ரன்கள் விளாசப்பட்டது. இதன் மூலம் ஒரே ஓவரில் 48 ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை அடல் படைத்துள்ளார்.
இந்த சாதனை ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வீடியோவும் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்க்கும் பலரும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.