டெல்லி: கடவுளுக்கு கூட நிவேதனம் வைத்து சரி கட்டி விடலாம். ஆனால் இந்த மனைவியை சமாளிக்க முடியவில்லை என்று நகைச்சுவையாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் வாழ்வக்கை வரலாறு குறித்த "சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்" என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் பிரீமியர் ஷோ என்னும் சிறப்புக் காட்சி கிரிக்கெட் வீரர்களுக்காக மட்டும் இரண்டு நாட்களுக்கு முன்னர் திரையிடப்பட்டது.
இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்காக பயணிக்க வேண்டிய நிலையிலும் டோனி, விராட் கோஹ்லி உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் படத்தை பார்வையிட்டு சென்றனர். ஆனால் வீரேந்திர சேவாக் மட்டும் இதில் பங்கேற்கவில்லை.
சச்சின் - சேவாக் கூட்டணி இந்திய அணிக்கு பல வெற்றிகளைக் குவித்துள்ள நிலையில், பிரீமியர் ஷோவில் தான் கலந்து கொள்ளாதது குறித்து வீடியோவுடன் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் கடவுள் என்னை சச்சின் படம் பார்க்க அழைத்தார். ஆனால், மனைவி விடுமுறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். நிவேதனம் கொடுத்து கடவுளை சரிகட்டிவிடலாம். ஆனால், மனைவியை சமாளிக்க முடியாதே என்று நகைச்சுவையாக கருத்து பதிவிட்டுள்ளார் சேவாக்.