அகமதாபாத்: நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வீரேந்திர சேவாக் சதம் அடித்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கில் இறங்கியது. ஷேவாக்கும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷேவாக் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடினார்.
21 ரன்கள் எடுத்த நிலையில் காம்பீர் ரைடரின் பந்தில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஷேவாக்குடன் திராவிட் ஜோடி சேர்ந்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷேவாக் 49 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 30 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து இருந்தது.
உணவு இடை வேளைக்கு பின் ஷேவாக்-திராவிட் இருவரும் தொடர்ந்து விளையாடினர். ஷேவாக் 111 பந்துகளில் 100 ரன்களைத் தொட்டார். 82வது டெஸ்டில் விளையாடும் ஷேவாக்குக்கு இது 22வது சதம் ஆகும்.
இந்தத் தொடரில் இரு அணிகளும் 3 டெஸ்டுகளில் விளையாட உள்ளன.