மும்பை: ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணியிடம் பஞ்சாப் அணி தோல்வியடைந்ததால் கோபமடைந்த அதன் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை பிரீத்தி ஜிந்தா கடுமையாக சத்தம் போட்டதால், அணியின் ஆலோசகர் பதவியில் இருந்து வீரேந்திர சேவாக் விலகுகிறார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
8ம் தேதி நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதியது. ராஜஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. வலுவான பேட்டிங் கொண்ட பஞ்சாப் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதற்கு முன் 6ம் தேதி நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை பஞ்சாப் வென்றது. ஜெய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஆட்டத்தின்போது, அஸ்வின் மூன்றாவது வீரராக களமிளறங்கினார். ஆனால் அவர் டக் அவுட்டானார்.
அந்த ஆட்டத்தில் பஞ்சாப் தோல்வியடைந்ததால், அதன் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை பிரீத்தி ஜிந்தா கடும் கோபமடைந்தார்.
அணியின் ஆலோசகரான முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்கிடம் இது குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். சேவாக்கும் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். ஆனால், பிரீத்தி ஜிந்தா தொடர்ந்து சத்தம் போட்டுள்ளார். சேவாக் அமைதியாக சென்றுவிட்டார்.
இது தொடர்பாக அணியின் மற்ற உரிமையாளர்களான மோகித் பர்மான், நெஸ் வாடியா உடன் சேவாக் பேசியுள்ளார். பஞ்சாப் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை சேவாக் எடுத்துள்ளதாக தெரிகிறது.
கடந்த ஆண்டும், அணியின் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கரை, இளம் வீரர்கள் முன், பிரீத்தி ஜிந்தா கடுமையாக கேள்வி கேட்டது பிரச்னையானது.