
அணியில் இடம்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆனால், இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வினுக்கு மீண்டும் பிளேயிங் லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 3வது டெஸ்ட் போட்டியில் காயம் ஏற்பட்ட நிலையில் ஜடேஜா இப்போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்றே கூறப்பட்டது. ஆனால், ஜடேஜா அணியில் இடம் பிடித்தார். நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

புரமோட் செய்யப்பட்ட ஜடேஜா
முதலில் ரோஹித் ஷர்மா, க்றிஸ் வோக்ஸின் பவுன்ஸ் பந்தில் எட்ஜ் ஆகி 11 ரன்களில் வெளியேறினார். பிறகு, 44 பந்துகளை சந்தித்த லோகேஷ் ராகுல், 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்திருந்த நிலையில் ராபின்சன் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சொதப்பிய ராகுல், இந்த போட்டியிலும் அதே மோடில் விளையாடினார். பிறகு, புஜாரா 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு, முதன் முறையாக 5வது வீரராக களமிறக்கப்பட்ட ஜடேஜா, 10 ரன்களில் வெளியேறினார். யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம் என்னவெனில், ரவீந்திர ஜடேஜா 5வது வீரராக களமிறக்கப்பட்டுள்ளது தான். வழக்கமாக நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கும் ரஹானே இம்முறை களமிறங்கவில்லை. அவருக்கு பதில், 7வது டவுனில் விளையாடவிருந்த ஜடேஜா களமிறங்கினார்.

அரிதான வாய்ப்பு
வழக்கமாக ஐந்தாவது இடத்தில் களமிறங்கும் ரஹானே, பேட் கட்டி ரெடியாக இருந்தபோதும் அவர் களமிறக்கப்படவில்லை. அதேபோல், ரிஷப் பண்ட் கூட பேட் எல்லாம் கட்டி ரெடியாக இருந்தார். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஜடேஜாவை விறுவிறுவென களமிறங்கியது ரசிகர்கள், வர்ணனையாளர்கள்... ஏன்... இங்கிலாந்து வீரர்களுக்கே பெரும் சர்பிரைஸாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம், ஜடேஜா மீதுள்ள அபார நம்பிக்கை தான். உண்மையில், அவர் நேற்று 5வது வீரராக களமிறக்கப்பட்டது அவருக்கு கிடைத்த அபார, அரிதான வாய்ப்பு என்று கூறலாம். முதல் தர டெஸ்ட் போட்டிகளில் மூன்று முறை முச்சதம் அடித்தவர் ரவீந்திர ஜடேஜா என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாகும். அந்த அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட் திறன் உடையவர் ஜடேஜா. அவருக்கான களம் இதுவரை சரியாக அமையவில்லை.
இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரையே எடுத்துக் கொள்ளுங்கள். முதல் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட்டுடன் பார்ட்னர்ஷிப் போட்டு சிறப்பாக விளையாடியிருப்பார் ஜடேஜா. முதல் இன்னிங்ஸில் முக்கியமான நேரத்தில், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிய போது அரைசதம் அடித்திருப்பார். ஒரு நல்ல பேட்ஸ்மேன், நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினால், அதில் ஜடேஜாவின் ஆட்டமே வேற லெவலில் இருக்கும். அதற்கு அந்த முதல் இன்னிங்ஸே ஒரு எடுத்துக்காட்டு. ஆனால், அவரது போதாத காலம், அவர் 7வது டவுனில் இறங்குவதால், எப்போதும் பவுலர்களுடனேயே விளையாடும் சூழல் அவருக்கு ஏற்படுகிறது. இதனால், அவரால் தனது திறமையை முழுமையாக வெளிக்கொணர முடியவில்லை. இந்த நிலையில், நேற்று ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. தக்க நேரம் அமைந்தது. ஆனால், ஜடேஜா வெறும் 10 ரன்களில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

ஜடேஜா மாற்றம் ஏன்?
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், ஜடேஜா 5வது டவுனில் இறக்கப்பட்டது குறித்து பேசுகையில், "ஜடேஜாவை முன்னதாகவே களமிறக்கியது, இடது கை வீரருக்கு எதிராக இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் லைன் அண்ட் லெந்த்தில் குழப்பம் விளைவிக்கும் யுக்தியாக இருக்கலாம். அதைத் தவிர்த்து காரணம் வேறு ஏதாவது என்று இருந்தால் அது இந்தியாவுக்கு நல்ல அறிகுறி அல்ல. ரஹானேவுக்கு முன்பாக சும்மா ஒரு போட்டியில் களமிறக்கி பார்த்திருக்கலாம். லண்டன் ஓவல் மைதானத்தில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகின்றன. இது வலது கை பேட்ஸ்மேன்களை ரொம்பவே தொந்தரவு செய்கிறது. அதற்காக கூட ஜடேஜா முன்னதாகவே களமிறக்கப்பட்டிருக்கலாம். பொதுவாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வலது கை மற்றும் இடது கை பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடும் போது, பந்துவீச்சாளருக்கு அது அடிக்கடி தொந்தரவை ஏற்படுத்தும். எனவே டெஸ்ட் போட்டிகளிலும் அதே தொந்தரவை ஏற்படுத்த இந்தியா முயற்சித்திருக்கலாம்

சொதப்பிய சச்சின்
ரஹானே கடைசி சில ஆட்டங்களில் அதிகம் அடிக்கவில்லை. கோஹ்லி மற்றும் புஜாராவின் நிலையும் இதுதான். ஆனால், அவர்களின் பேட்டிங் ஆர்டர் ஏன் மாற்றப்படவில்லை? எனவே, இது சும்மா ஜஸ்ட் ட்ரை செய்து பார்க்கலாம் என்று இந்தியா முயற்சித்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் டெண்டுல்கர் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினார். எனவே, கேப்டன் சவுரவ் கங்குலி சச்சின் ஆர்டரை 4 லிருந்து 5க்கு மாற்றினார். இதனால், கங்குலி நான்காம் இடத்தில் பேட் செய்தார். சில நேரங்களில் இப்படியான மாற்றங்கள் தேவைப்படுகின்றன. நான் ஒரு தொடக்க வீரராக ஸ்கோர் செய்யாதபோது கூட, மிடில் ஆர்டரில் பேட் செய்ய அனுப்பப்பட்டேன். ஆனால், நான் ஃபார்முக்கு வந்த பிறகு, மீண்டும் டாப் ஆர்டரில் விளையாடினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











