டெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்காக துவக்க வீரர்களாக களமிறங்கி அசத்திய வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் மீண்டும் இணைய உள்ளனர். இந்த முறை டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக செயல்பட உள்ளனர். ஆனால் இந்த நியமனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பிசிசிஐ நிர்வாகம் குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதி லோதா தலைமையிலான ஒரு குழுவை அமைந்தது. நீதிபதி லோதா குழு அளித்த பல்வேறு பரிந்துரைகளை செயல்படுத்தும்படி உத்தரவிட்டது.
அதன்படி டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு ஆலோசனைகள் வழங்க கிரிக்கெட் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன் உறுப்பினர்களாக முன்னாள் வீரர்களான வீரேந்திர சேவாக், ராகுல் சிங்கி, ஆகாஷ் சோப்ரா ஆகியோருடன் சிறப்பு அழைப்பாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வீரர்கள் தேர்வு, கோச்கள் நியமனம் உள்பட பல்வேறு விஷயங்களில் இந்தக் குழுதான் முடிவுகளை எடுக்க உள்ளது. தற்போதும் விளையாடி வரும் கம்பீரை இந்தக் குழுவில் சேர்த்தது கேள்வியை எழுப்பியுள்ளது. தன்னைத் தானே கம்பீர் தேர்வு செய்து கொள்வாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தவிர மேலும் சில சந்தேகங்களையும் இந்த நியமனங்கள் ஏற்படுத்தியுள்ளன. டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ள ரஜத் சர்மாவுக்கு சொந்தமான டிவி சேனவில் வர்ணனையாளராக உள்ளார் சேவாக். மேலும் சேவாக் தனியாக கிரிக்கெட் அகாதெமி நடத்தி வருகிறார். அதனால் பாரபட்சம் இல்லாமல் செயல்படுவாரா என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பியுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடர்புள்ளவர் சிங்வி, ஆகாஷ் சோப்ரா பல்வேறு டிவிக்களில் வர்ணனையாளராக உள்ளார். இவர்கள் இருவரும் மும்பையிலேயே தங்கியுள்ளனர். இவர்கள் எப்படி டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் முன்னேற்றத்துக்கு உதவுவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
நியமனம் செய்யப்பட்டுள்ள சேவாக், கம்பீர் உள்ளிட்ட நால்வரும், தலைவர் ரஜத் சர்மாவுக்கு வேண்டியவர்கள் என்பது மட்டுமே ஒரே ஒற்றுமை என்று கூறப்படுகிறது.