கமிட்டி சொன்ன பயிற்சியாளர்
டெல்லி மாநில கிரிக்கெட்டில் சேவாக், ஆகாஷ் சோப்ரா மற்றும் ராகுல் சங்வி இணைந்து அந்த மாநில அமைப்பின் மற்ற கமிட்டிகள் மற்றும் பயிற்சியாளர்களை நியமிக்கும் பணிகளை செய்தனர். அதில் பந்துவீச்சு பயிற்சிக்கு டெல்லி மாநிலத்தின் முன்னாள் பயிற்சியாளர் மனோஜ் பிரபாகர் பெயரை கூறியுள்ளனர் சேவாக் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள்.
ஏற்க மறுத்த அமைப்பு
இதை டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பு ஏற்க மறுத்துள்ளது. இதனிடையே அந்த கமிட்டியில் நான்காவதாக கம்பீரை இணைத்துள்ளனர். அவர் மனோஜ் பிரபாகர் பயிற்சியாளராக இருப்பதை கடுமையாக எதிர்த்ததாக கூறப்படுகிறது. அதே போல, மற்ற மூவர் நான்காவது நபர் உள்ளே நுழைவதை எதிர்த்துள்ளனர்.
மேட்ச் பிக்ஸிங் புகார்
மனோஜ் பிரபாகர் மீது 2000வது ஆண்டில் ஒரு மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்தது. கம்பீருக்கு இது போன்ற புகார் உள்ளவர்கள் கிரிக்கெட் அமைப்பில் இருப்பது பிடிக்காமல் தான் இதை எதிர்க்கிறார் என கூறுகிறார்கள் டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் நிர்வாகிகள்.
மூவர் அணி விலகல்
இதையடுத்து அந்த கிரிக்கெட் கமிட்டியில் இருந்து சேவாக், ஆகாஷ் சோப்ரா மற்றும் ராகுல் சங்வி பதவி விலகியுள்ளனர். இந்த விவகாரத்தில் டெல்லி கிரிக்கெட் அமைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், "கம்பீர், சேவாக் இடையே பிரச்சனை என சொல்வது தவறாகும். இன்னும் சில நாட்களில் புதிய விதிகள் கொண்டு வரப் போகிறோம். அதன்படி, ஏற்கனவே ஒரு கிரிக்கெட் அணியில் பணிபுரிபவர்கள் இங்கே இருக்க முடியாது. சேவாக் டெல்லி கிரிக்கெட் அமைப்பின் சிறப்பு ஆலோசகர் பதவியிலும், ராகுல் சங்வி மும்பை இந்தியன்ஸ் அணி பதவியிலும் இருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு நாம் விலக வேண்டும் என தெரியும்" என கூறி இருக்கிறார்.