டெல்லி: டெல்லி பிரீமியர் லீக் தொடரில் மத்திய டெல்லி கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சேவாக் மகன் ஆர்யாவீர், தனது பிடித்த வீரரின் பெயரை கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். 17 வயதாகும் அவர், தோனி, ரோகித் சர்மா உள்ளிட்டோரை விடவும் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறந்த வீரர்கள் என்று கூறி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சேவாக், தற்போது தனது மகனை கிரிக்கெட் வீரராக மாற்றும் முயற்சியில் இருந்து வருகிறார். ஏற்கனவே டெல்லி கிரிக்கெட் வட்டாரத்தில் சேவாக் மகன் ஆர்யாவீர் பெயர் பேசுபொருளாகி இருக்கிறது. 17 வயதாகும் ஆர்யாவீர், டெல்லி பிரீமியர் லீக் தொடரில் மத்திய டெல்லி கிங்ஸ் அணியால் ரூ.8 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சேவாக் மகன் என்பதால், சோசியல் மீடியா மற்றும் தொலைக்காட்சிகளில் ஆர்யாவீருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்யாவீருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ரோகித் சர்மாவை விடவும் தோனியை பிடிக்கும் என்று கூறிய அவர், தோனியை விடவும் சுப்மன் கில்லை பிடிக்கும் என்று தெரிவித்தார்.
இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதன்பின் சுப்மன் கில் அல்லது விராட் கோலி ஆகிய இருவரில் யாரை பிடிக்கும் என்ற கேள்வி முன் வைக்கப்பட, இறுதியாக விராட் கோலியை தேர்வு செய்தார். இதனால் சிஎஸ்கே, மும்பை ஆகிய அணிகளின் ரசிகர்கள் ஆர்யாவீரை விமர்சித்து வருகின்றனர். ஆர்யாவீர் இன்னும் வளர வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே கர்நாடகாவில் நடக்கும் மகாராஜா டிராபியில் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் விளையாடி வருகிறார். தற்போது டெல்லி பிரீமியர் லீக் தொடரில் சேவாக் மகன் ஆர்யாவீர் ஆட தொடங்கி இருக்கிறார். ஜாம்பவான் வீரர்கள் பலரும் தங்களது வாரிசுகளை எளிதாக மாநில லீக் தொடர்களில் களமிறக்கி வருவது வாடிக்கையாகி வருகிறது.
கிரிக்கெட் களத்தில் இதுவரை பெரியளவில் வாரிசுகள் வென்றது இல்லை. யுவராஜ் சிங் உள்ளிட்ட சில வீரர்களை கடந்து வேறு யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனாலும் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெற்று வருகிறார். இதனால் வரும் காலத்தில் சேவாக் மற்றும் டிராவிட் ஆகியோரின் மகன்களுக்கும் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.