டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக், இந்திய டெஸ்ட் அணியில் யாரை துவக்க வீரராக ஆட வைக்கலாம் என்பது குறித்த தன் கருத்தை கூறி இருக்கிறார்.
இந்தியா - இங்கிலாந்து இடையே நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 1-3 என தொடரை இழந்து விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்களில் கோலி தவிர யாரும் தொடர் முழுவதும் சரியாக ரன் குவிக்கவில்லை.
மூன்றாம் போட்டியில் மட்டும் சிலர் ரன் குவித்தனர். மீண்டும் நான்காம் போட்டியில் புஜாரா மட்டுமே ஒரு இன்னிங்க்ஸில் சதம் அடித்தார். மற்றபடி பேட்ஸ்மேன்களால் தான் இந்தியா டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்துள்ளது.
இந்தியாவின் துவக்க பேட்ஸ்மேன்கள் தான் அணியின் பெரிய பின்னடைவாக உள்ளனர். முதலில் முரளி விஜய் - ஷிகர் தவான் இணை நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகளில் நல்ல துவக்கம் அளித்து வந்தனர். இவர்களில் யாராவது ஒருவர் பார்ம் அவுட் ஆகும் நிலை வந்தால் ராகுல் அந்த இடத்தை நிரப்பினார்.
குறிப்பாக, இங்கிலாந்து தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் முரளி விஜய் சுத்தமாக ரன் எடுக்கவில்லை. இரண்டாம் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸிலும் ரன்னே எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரை நீக்கிவிட்டு அடித்த இரண்டு போட்டிகளில் ராகுல் - தவான் இணை இந்தியாவின் துவக்க வீரர்களாக மாறினார்கள்.
அவர்களும் தற்போது சரியில்லை என்ற நிலையில், "இந்தியாவின் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் சேர்த்து ஒரே துவக்க வீரர்கள் இணை தான் இருக்க வேண்டும். தற்போது மூன்று வித கிரிக்கெட்டிலும் வேறு வேறு வீரர்கள் இருக்கின்றனர். இதை மாற்றி ரோஹித் சர்மாவை டெஸ்டிலும் துவக்க வீரராக ஆட வைக்க வேண்டும்" என தன் புதிய கோணத்தை கூறி இருக்கிறார் சேவாக். ரோஹித் சர்மா, ஒருநாள் மற்றும் டி20இல் மட்டுமே இடம் பெறுகிறார். டெஸ்ட் அணியில், தற்போது அவருக்கு இடம் மறுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சேவாக், "தற்போது துவக்க இடத்தை நிரப்ப காத்திருக்கும் இளம் வீரர் ப்ரித்வி ஷா, மூன்றாவது துவக்க வீரராக அணியில் இருக்கலாம். தவான், ரோஹித் இருவரில் யாரேனும் ஆட முடியாத சூழ்நிலையில் ப்ரித்வி களம் இறங்கலாம்" எனவும் கூறியுள்ளார்.