டெல்லி: டெல்லி பிரீமியர் லீக் தொடரில் மத்திய டெல்லி கிங்ஸ் அணிக்காக சேவாக் மகன் ஆர்யாவீர் சேவாக் அறிமுகமாகி இருக்கிறார். நவ்தீப் சைனி பவுலிங் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை நடந்து வந்து அசால்ட்டாக விளாசிய ஆர்யாவீரின் பேட்டிங் பலரையும் வியக்க வைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் மிகவும் முக்கியமானவர் சேவாக். இவரின் அதிரடி ஆட்டத்தை எந்தவொரு இந்திய ரசிகராலும் மறக்கவே முடியாது. ஸ்பின்னர்களை நடந்து வந்து எளிதாக அட்டாக் செய்வதில் சேவாக்கிற்கு நிகர் சேவாக் மட்டும்தான். இந்த நிலையில் சேவாக் தனது வாரிசை கிரிக்கெட் களத்திற்குள் கொண்டு வந்துள்ளார்.

டெல்லி பிரீமியர் லீக் தொடரில் மத்திய டெல்லி கிங்ஸ் அணிக்காக சேவாக் மகன் ஆர்யாவீர் ரூ.8 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். கடந்த சில போட்டிகளாக அவருக்கு எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. பெஞ்சில் இருந்த அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் யாஷ் துல் துலீப் டிராபி தொடரில் விளையாட புறப்பட்டதால், அவரது இடத்தில் ஆர்யாவீர் சேர்க்கப்பட்டார்.
17 வயதாகும் ஆர்யாவீர், தனது 4வது பந்தில் முதல் ரன்னை எடுத்தார். இதன்பின் கியரை மாற்றியா ஆர்யாவீர், நவ்தீப் சைனி பவுலிங்கில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். அந்த இரு பவுண்டரிகளையும் கொஞ்சம் கூட அச்சமில்லாமல் டவுன் தி டிராக் நடந்து வந்து ஆர்யாவீர் அட்டாக் செய்தது வியப்பை ஏற்படுத்தியது. முதல் இன்னிங்ஸிலேயே 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.
சேவாக்கின் இரு மகன்களும் டெல்லி பிரீமியர் லீக் தொடரில் 2 அணிகளால் வாங்கப்பட்டுள்ளார். மூத்த மகன் ஆர்யாவீர் மத்திய டெல்லி கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ள நிலையில், இளைய மகன் வேதாந்த் வடக்கு டெல்லி லயன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் சேவாக் மகன்களின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக சேவாக் தனது ஆட்டம் குறித்து பேசுகையில், என் 2 மகன்களுமே எனது அட்வைஸ்களை கொஞ்சம் கூட கேட்பதே கிடையாது. எதைப் பற்றியும் கவலைக் கொள்ள மாட்டார்கள் என்று கூறி இருந்தார். தற்போது வர்ணனையில் இருந்து கொண்டு அவர்களின் ஆட்டத்தைப் பற்றி பேசி இருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.