மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு மீண்டும் வர முயற்சி செய்திருக்கிறார் ஒரு மூத்த வீரர். ஆனால், பிசிசிஐ அதற்கு மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய அணி சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று சிறப்பாக செயல்பட்டது. ஆனால், டெஸ்ட் தொடர்களில் மோசமான தோல்விகளைச் சந்தித்தது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடுத்தடுத்து மோசமான தோல்விகளை இந்திய அணி சந்தித்திருந்தது. இதை அடுத்து, அந்த டெஸ்ட் தொடர்களில் ரன் குவிக்காத ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை அணியிலிருந்து நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன.

கடைசி ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியின் போது கேப்டன் ரோகித் சர்மா தாமாகவே முன்வந்து கேப்டன் பதவியிலிருந்து விலகியிருந்தார். ஆனால், அது ஒரு போட்டிக்கு மட்டும்தான் என அவர் விளக்கமும் அளித்திருந்தார். இந்த நிலையில், ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளது. அந்த டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்பதில் விவாதம் நடந்து வருகிறது.
ரோகித் சர்மாவை மீண்டும் கேப்டனாக நியமித்தாலும், 2025 முதல் 2027 வரையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முழுவதும் அவரால் விளையாட முடியுமா? அவர் சரியாக ரன் குவிப்பாரா? என்பது போன்ற சந்தேகங்கள் உள்ளன. இந்த முழு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கும் ஒரே கேப்டன் தான் இருக்க வேண்டும் என பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில், இளம் வீரர்களை கேப்டனாக நியமிப்பது சரியாக இருக்குமா என்ற குழப்பமும் எழுந்துள்ளது.
இதனிடையே தான், இதற்கு முன் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ஒரு மூத்த வீரர், தனக்கு மீண்டும் கேப்டன் பதவி அளிக்குமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. அடுத்த கேப்டனை அடையாளம் காணும் வரை தான் தற்காலிகமாக கேப்டனாக இருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், பிசிசிஐ தங்களின் தற்காலிக கேப்டனை நியமிக்க விரும்பவில்லை என அவரிடம் தெளிவுபடுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த மூத்த வீரர் ரோகித் சர்மாவா அல்லது விராட் கோலியா என்பது தெரியவில்லை. ரோகித் சர்மா இது தொடர்பாக வெளிப்படையாகவே ஊடகங்களிலும் பேட்டிகளிலும் பேசி வருகிறார். எனவே, இந்த விவகாரம் அவர் தொடர்பானது இருக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போதே விராட் கோலி கேப்டன் பதவியை கேட்டதாக ஒரு சர்ச்சை எழுந்தது. எனவே, அவர்தான் பிசிசிஐயிடம் மீண்டும் கேப்டன் பதவி கேட்டாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.