
அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
பாகிஸ்தான் அணியில் சமீப காலமாக சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. சமீபத்தில் முகமது அமீர், பாகிஸ்தானில் அனுபவமே இல்லாத இளம் வீரர்கள் சர்வதேச தொடரில் கட்டாயமாக களமிறக்கப்படுகிறார்கள் எனக்கூறியிருந்தார். அதே போல கேப்டனுக்கு நெருக்கமான வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவதாக வீரர் ஜுனைத் கான், கூறினார்.

சீனியர் வீரர்
இது ஒருபுறம் இருக்க அணியின் சீனியர் வீரரான வஹாப் ரியாஸ் இன்று தனது பங்கிற்கு ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அதில் பாகிஸ்தானில் வீரர்கள் ஓரிரு போட்டிகளில் சொதப்பினால் கூட தூக்கி எறியப்படுகிறார்கள். 2 போட்டிகளை வைத்து எப்படி வீரர்களின் ஆட்டத்தை முடிவு செய்ய முடியும். அனுபவம், சாதனைகளை வைத்து தேர்வு முறை இருக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

நெப்போட்டிசம் குற்றச்சாட்டு
இந்நிலையில் சோஹிப் மாலிக் ஒருபடி மேல் சென்றுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாமுக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டும் அணியில் சேர்க்கப்படுவதாகவும், மற்றவர்கள் ஒதுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அதற்கு சமீபத்தில் நடந்த சிம்பாவே தொடரை வைத்து உதாரணம் ஒன்றையும் அவர் கூறியுள்ளார்.

என்ன ஆதாரம்?
ஜிம்பாவே தொடரின் போது கேப்டன் பாபர் அசாம் பரிந்துரைத்த வீரர்கள், தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் தேர்வுக்குழுவுடன் பாபர் கடும் சண்டையிட்டதாகவும், பின்னர் தனது முடிவே இறுதியாக இருக்க வேண்டும் எனவும் நிபந்தணை விதித்ததாக தெரிகிறது.

உறுதுணையாக நிற்பேன்
இது குறித்து மேலும் பேசிய சோஹிப், எனது விதி எதுவாக இருந்தாலும் அதனை கடவுள் முடிவு செய்ய வேண்டும், தனிப்பட்ட யாரும் முடிவு செய்யக்கூடாது. நான் இனி அணியில் சேர்க்கப்படவில்லை என்றாலும் கூட கவலைப்பட மாட்டேன். ஆனால் பாகிஸ்தான் அணியில் நடக்கும் தவறுகளுக்கு எதிராக என் சக வீரர்களுடன் நிற்காவிட்டால் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பேன். அதனால் தான் தற்போது உண்மையை கூறினேன் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications