மும்பை: பாகிஸ்தான் அணியில் எத்தனை சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அவர்களை எதிர்கொள்ளும் தைரியம் உள்ள பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் ஏராளமானோர் இருக்கிறார்கள் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற இங்கிலாந்து ஜாம்பவான் ஷாகீன் அப்ரிடி, பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அப்ரிடி என்னை அதிகம் ஈர்த்துவிட்டார். அவரின் எதிர்காலத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று கூறி இருந்தார். யாரையும் புகழாத இங்கிலாந்து வீரர்கள் கூட ஷாகீன் அப்ரிடியை பாராட்டி வருகின்றனர். அந்த அளவிற்கு ஷாகீன் அப்ரிடியின் பந்துவீச்சு உச்சத்தில் இருக்கிறது.

ஷாகீன் அப்ரிடி மட்டுமல்லாமல் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் என்று மிரட்டலான பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியில் இருக்கிறார்கள். 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஷாகீன் அப்ரிடி விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுலை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்டும் ஷாகீன் அப்ரிடி, முதல் ஸ்பெல்லில் விக்கெட் வீழ்த்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு ஷாகீன் அப்ரிடி பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசுகையில், ஷாகீன் அப்ரிடி சிறந்த பவுலர் தான். அதனால் அவர் விளையாட முடியாத பவுலர் அல்ல. தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணிக்கும் இரு பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணியில் ஷாகீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷா இருக்கிறார்கள்.

அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் இருக்கிறார்கள். நியூசிலாந்து அணியில் வாக்னர், போல்ட் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை எதிர்கொள்ள இந்திய அணியிடம் நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். சிறந்த வீரர்களை இந்திய அணி கொண்டுள்ளது. என்னை பொறுத்தவரை வீரர்களை மாற்றாமல் விளையாடினாலே போதுமானது என்று நினைக்கிறேன்.
இந்திய அணிக்கான சரியான வீரர்களை தேர்வு செய்து வெற்றி மற்றும் தோல்விகளை கடந்து அவர்களை ஓராண்டு தொடர்ந்து அணியில் வைத்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். 1999ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணி வீரர்களை மாற்றவே இல்லை. அதன் காரணமாகவே அவர்களால் அந்த காலக்கட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.