லாகூர் : பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்து ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறி உள்ள நிலையில், அந்த அணியின் கேப்டன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் இந்திய அணி எப்படி தொடரில் அணியை நிர்வகிக்கிறது என்பதை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் கேப்டன் சாஹித் அப்ரிடி கூறி இருக்கிறார்.

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி துவக்கம் முதல் தன் அணியின் வீரர்களை அடுத்தடுத்த போட்டிகளில் மாற்றவில்லை. ஒரே அணியுடன் தான் தொடர்ந்து ஆடி வந்தது. இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் அந்த அணியின் மூன்று வீரர்கள் காயம் அடைந்தனர். அதனாலேயே கடைசியாக ஆடிய இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி வீரர்களை மாற்றி இருந்தது.
தற்போது, தொடர்ந்து வீரர்களுக்கு ஓய்வு அளிக்காமல் இருந்ததை குற்றம்சாட்டி பேசி இருக்கிறார் ஷாஹித் அப்ரிடி. மேலும், இந்திய அணி உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் அனைத்து இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு அளித்ததை அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "இது தொன்று தொட்டு இருக்கும் பிரச்சனை. இந்தியாவும் ஆசிய கோப்பையில் ஆடியது. அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் தங்கள் அணியை மாற்றிக் கொண்டே இருந்தார்கள். மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அவர்கள் உலகக்
கோப்பைக்கு தயாராகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது." என்றார்.
மேலும், "இந்த முடிவுகள் மிகவும் முக்கியமானவை. நீங்கள் 15 வீரர்கள் கொண்ட உத்தேச அணியை தேர்வு செய்கிறீர்கள். போட்டியில் வெளியே அமரும் வீரரும், களத்தில் ஆடும் வீரர் போன்றே நன்றாக ஆடக் கூடியவர்தான். அதனால், முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பதில் யோசிக்கக் கூடாது. ஷதாப் கானுக்கு ஓய்வு அளித்தால், உசாமா மிர் இருக்கிறார். அவர் இதற்கு முன் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். சிலர் சில போட்டிகளில் தொடர்ந்து சரியாக ஆடவில்லை என்றால் அவர்களுக்கு ஓய்வு கொடுங்கள். அவர்களை அணியில் இருந்தே நீக்க வேண்டும் என நான் கூறவில்லை." என அப்ரிடி பாபர் ஆசாமுக்கு அறிவுரை கூறி இருக்கிறார்.