இஸ்லாமாபாத்: அடுத்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் நான் விளையாடுவேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 4வது ஐ.பி.எல். தொடரில் விளையாட, இளம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில், நிறைய பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவார்கள் என நம்புகிறேன்.
இருப்பினும் இது பாகிஸ்தான் அரசு மற்றும் கிரிக்கெட் போர்டின் முடிவைப் பொறுத்தது. அதேவேளையில் ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகள், பாகிஸ்தான் வீரர்களை முறைப்படி அழைக்கும் பட்சத்தில் அடுத்து வரும் ஐ.பி.எல். தொடரில் நிச்சயம் பங்கேற்பேன்.
இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் வீரர்களின் செயல்பாடு வருத்தம் அளிக்கிறது. இதற்கு அணியில் இடம் பெற்றுள்ள நிறைய வீரர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் பெறாதது முக்கிய காரணம். இருப்பினும் அடுத்து நடக்கவுள்ள டுவென்டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் என நம்புகிறேன். ஏனெனில் ஒருநாள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடு திருப்தி அளிக்கிறது.
பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நிறைய பேர் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இது மிகவும் வேதனையாக உள்ளது. இதற்காக நிதி திரட்ட சமீபத்தில் துபாய் சென்று வந்தேன். இதன்மூலம் பாகிஸ்தான் மக்களின் கவலை ஓரளவு குறைந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது என்றார்.
கடந்த ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக அணி நிர்வாகங்களும், ஐபிஎல் அமைப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்தது நினைவிருக்கலாம்.