“அவர் சொல்றதும் சரிதானே”.. ஆசிய கோப்பை குறித்த அஸ்வினின் கருத்து.. ஆதரவு தந்த சாஹித் அஃப்ரிடி!
லாகூர்: ஆசிய கோப்பை தொடர் குறித்து இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பிரச்சினை வெடித்து வரும் சூழலில் அஸ்வின் கூறிய கருத்தை யோசித்து பார்க்க வேண்டும் என்பது போல பாகிஸ்தானுக்கு சாஹீத் அஃப்ரிடி அறிவுரை கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் எங்கு நடைபெறும் என்ற பிரச்சினை நீண்ட நாட்களாக வெடித்து வருகிறது. இந்தாண்டுக்கான ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் தான் பெற்றிருந்தது.
ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறிவிட்டார். மேலும் வேறு நாட்டிற்கு இந்த தொடர் மாற்றப்படும் எனத்தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்
இதுகுறித்து சமீபத்தில் நடந்த ஆசிய கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என ஜெய் ஷா தடாலடியாக கூறிவிட்டார். இதற்கு பதில் கொடுத்த பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜம் சேதி, பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால், இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் வராது என கூறிவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஸ்வினின் அறிவுரை
இந்த சம்பவம் குறித்து பேசிய அஸ்வின், இந்தியாவுக்கு பாகிஸ்தான் வராது என அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அது நடப்பது அசாத்தியமற்றது. ஏனென்றால் உலகக்கோப்பை போன்ற பெரும் தொடரை பாகிஸ்தான் புறகணிக்காது. அப்படி ஒருவேளை புறகணித்தால் ஐசிசியிடம் இருந்து பாகிஸ்தானுக்கு இடைக்கும் நிதிகள் கிடைக்காமல் போய்விடும் அச்சம் உள்ளது என்பது போல அஸ்வின் கூறியிருந்தார்.

அஃப்ரிடி கருத்து
இந்நிலையில் இதற்கு ஆதரவு தரும் வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அஃப்ரிடி பேசியுள்ளார். அதில், சொந்த காலில் எந்தவித பிரச்சினையும் இன்றி நிற்கக்கூடியவர்களால் தான் தைரியமான முடிவுகளை எடுக்க முடியும். அந்தவகையில் இந்தியா தன்னை பலமான வாரியமாக மாற்றிக்கொண்டது. இதனால் தான் தைரியமாக அறிவித்து வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் சற்று யோசிக்க வேண்டியுள்ளது.

ஐசிசியின் தலையீடு
இந்த விவகாரத்தில் ஐசிசி நிச்சயம் தலையிட்டே ஆக வேண்டும். ஆனால் பிசிசிஐ-க்கு எதிராக ஐசிசி எந்தவொரு முடிவையும் எடுக்காது என்பது தெரிந்த விஷயம் தான். எனவே இந்த விஷயத்தில் மிகவும் அழுத்தமான முடிவை எடுப்பது அவசியமாகும். உணர்ச்சிப்பூர்வமாக யோசித்தால் இந்தியாவுக்கு பாகிஸ்தான் செல்லக்கூடாது என நானும் கூறுவேன். ஆனால் நம்முடைய பொருளாதாரத்தையும் பார்க்க வேண்டும். அதனை யோசித்து பார்த்தால் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கக்கூடாது என்பது தெரியும் என அஃப்ரிடி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications