லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணிக்கு எதிராக உலகில் சிறந்த 11 வீரர்கள் கொண்ட பலமான அணியை ஆட வைத்திருந்தாலும், இந்தியா வெற்றி பெற்று இருக்கும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரிடி பேசி இருக்கிறார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்திய அணி தொடர்பான சர்ச்சை குறித்து பேசும்போது ஷாஹித் அஃப்ரிடி இவ்வாறு பேசியிருக்கிறார். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பு தெரிவித்ததால், இந்திய அணி ஆடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்திய அணி ஒரே மைதானமான துபாய் சர்வதேச மைதானத்தில் தனது போட்டிகள் அனைத்தையும் விளையாடியது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளிலும் இந்திய அணி அந்த மைதானத்திலேயே விளையாடியது. அதனால் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடியதால் தான் கோப்பை வென்றது என்ற ஒரு விமர்சனம் உள்ளது. அது குறித்த விவாதத்தில் ஷாஹித் அஃப்ரிடி பேசியதாவது:
"இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்ல தகுதியானவர்கள். உள்நாட்டு கிரிக்கெட்டில், கிரிக்கெட் கட்டமைப்புகளில், கல்வி நிலையங்களில் நல்ல கிரிக்கெட்டை வளர்க்க நீங்கள் முதலீடு செய்தால் இது போன்ற முடிவுகள் உங்களுக்கு கிடைக்கும்."
"இந்திய அணி நிச்சயமாக துபாயில் ஆடுவதற்கு ஏற்ற ஒரு அணியை தான் தேர்வு செய்தது, அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்திய தேர்வு குழுவினர் அற்புதமான வேலையை செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பே தாங்கள் எந்த சூழ்நிலையில் விளையாட போகிறோம் என்பது தெரியும். ஏனெனில், அவர்கள் இடங்களை மாற்றாமல் ஒரே மைதானத்தில் அனைத்து போட்டிகளிலும் ஆடினார்கள். அது அவர்களது வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தாலும், அணித் தேர்வும் முக்கிய காரணம்."
"நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால், நானும் துபாயில் விளையாடியிருக்கிறேன். நாங்கள் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக ஆடுவோம். இங்கு சுழற் பந்துவீச்சாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அந்த வகையில் அவர்களின் தேர்வு மிகவும் நன்றாக இருந்தது."
"இந்திய அணியில் துவக்க வீரர்கள் முதல் மிடில் ஆர்டர் வரை, பின் ஆல்-ரவுண்டர்கள், அதன் பின் முழு நேர சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். இந்த அணிக்கு எதிராக நீங்கள் சாம்பியன்ஸ் டிராபியில் உலக லெவன் அணியை ஆட வைத்திருந்தாலும், இந்தியா நிச்சயம் வெற்றி பெற்று இருக்கும்" என்று ஷாஹித் அஃப்ரிடி கூறினார்.