இஸ்லாமாபாத்: சுயலாபத்துக்காக பலரின் வாழ்க்கையை அப்ரிடி கெடுக்கிறார் என்று பாகிஸ்தான் வீரர் இம்ரான் பர்கத் குற்றம்சாட்டி இருக்கிறார்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான சாகித் அப்ரிடி, தி கேம் சேஞ்சர் என்ற தலைப்பில் சுய சரிதை ஒன்று எழுதி உள்ளார். அதில் கிரிக்கெட் போட்டிகளின் போது தாம் எதிர்கொண்ட சவால்கள், அணி வீரர்களின் தேர்வு, மற்ற நாடுகளின் வீரர்கள் பற்றியும் முக்கிய தகவல்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

கவுதம் கம்பீர் பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர்.. மைதானத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதவர் என்று விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி தந்த கம்பீர், அப்ரிடி ஒரு மனநோயாளி... இந்தியாவில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றார். இருவருக்கும் காரசாரமான மோதல் எழுந்திருக்கிறது.
பாகிஸ்தான் வீரர் இம்ரான் பர்கத் பற்றியும் அப்ரிடி அந்த புத்தகத்தில் விமர்சித்திருந்தார். அதற்கு அவர் தக்க பதிலடியை தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: அப்ரிடி, 20 வயது என பொய் கூறியது அவமானம் தரக்கூடிய விஷயம். இப்படி சொல்பவர் எப்படி சில சிறப்பான வீரர்களை குறை சொல்ல முடியும்? என்றார்.
இது மாதிரி பல கதைகளை துறவிகள் போல அவர் சொல்லிக் கொண்டே போகலாம். இதன் மூலம், அரசியல்வாதிக்கான எல்லா தகுதிகளையும் அவருக்கு உள்ளது என்பது தெளிவாகிறது. என்னிடமும் பதிலடி தர சரியான காரணங்கள் உள்ளன. ஆனால் அவர் போன்று சொந்த காரணத்துக்காக பலரின் வாழ்க்கையை வீணடிக்க மாட்டேன் என்றார்.