நல்லா கேட்டுக்குங்க.. அப்ரிடி எழுதுன வாழ்க்கை வரலாறு புத்தகத்தை அப்ரிடியே படிக்கலையாம்!!
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.
அப்படிப்பட்டவர் தன் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை "கேம் சேஞ்சர்" என்ற பெயரில் வெளியிட்டார். அந்த புத்தகம் வெளியானதில் பல சர்ச்சைகள் வெடித்தன.

அப்ரிடியின் உண்மையான வயது என்ன? அவர் எந்த வயதில் தன் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை ஆடினார் என்பதில் சில குழப்பங்கள் இருந்தன. அவரது பிறந்த வருடம் 1980 என சிலர் கூறுகின்றனர்.
அதை மேலும் குழப்பும் வகையில், தான் 19 வயதில் கிரிக்கெட் ஆடத் துவங்கினேன் என புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார் அப்ரிடி. அப்படி பார்த்தால் அவரது பிறந்த வருடம் 1978. ஆனால், புத்தகத்தில் 1975இல் பிறந்ததாக கூறியுள்ளார்.
இது ஒருபுறம் என்றால், தனக்கு பிடிக்காத கிரிக்கெட் வீரர்களை எல்லாம் சுற்றி வளைத்து கண்ட மேனிக்கு திட்டியும், புகார் கூறியும் இருக்கிறார் அப்ரிடி. அதில் முன்னாள் இந்திய வீரர் கெளதம் கம்பீர் தான் அதிக திட்டு வாங்கியவர்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர்களையும் விட்டுவைக்கவில்லை அப்ரிடி. இந்த நிலையில், புத்தக அறிமுக விழாவில் பங்கேற்ற அப்ரிடியிடம் அவரது பிறந்த வருடம் குறித்து, புத்தகத்தில் கூறியுள்ளதில் குழப்பம் உள்ளதே என கேட்கப்பட்டது.
கடந்த 7-8 மாதங்களாக தான் பல்வேறு நாடுகளில் இருந்ததாகவும், இந்த புத்தகத்தை படிக்க நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். பிறந்த வருடம் புத்தகத்தில் தவறாக உள்ளதாகவும், அது திருத்தப்படும் என்றும் கூறினார்.
அப்ரிடி வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதியவர்கள் - அப்ரிடி மற்றும் வஜாஹத் கான் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்ப அப்ரிடி எழுதிய அவரோட வாழ்க்கை வரலாறு புத்தகத்தை, அவரே படிக்கலையா? என்னங்க.. குழப்பமா இருக்கு!


Click it and Unblock the Notifications