கொழும்பு : பாகிஸ்தான் வீரர்கள் ஆசிய கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சொதப்பிய நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு பெரிய சொதப்பல் ஒன்றை செய்துள்ளது. அதைக் கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் சிரித்து வருகின்றனர்.
2023 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று இலங்கையில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியும் சூப்பர் 4 சுற்றில் பங்கேற்று தன் மூன்று போட்டிகளையும் ஆடிவிட்டது.

அந்த அணியின் ஹாரிஸ் ரௌப் என்ற வேகப் பந்து வீச்சாளருக்கு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை அனுப்ப முடிவு செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. அதற்காக ஷானவாஸ் தஹானி என்ற வீரரை மாற்று வீரராகவும் அறிவித்தது.
ஆனால், அவரால் அடுத்து பாகிஸ்தான் அணி ஆடிய இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்கு முன் போட்டி நடைபெற்ற கொழும்புவிற்கு சென்று சேர முடியாது என்ற நிலை இருந்தது.
ஆனாலும், அவரை பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைத்தது அந்நாட்டின் கிரிக்கெட் போர்டு. அவர் இந்த அறிவிப்பு வரும் போது இஸ்லாமாபாத்தில் இருந்தார். அங்கே இருந்து லாகூர் செல்ல வேண்டும். அங்கு செல்ல நேரடி விமானம் இல்லாததால் கராச்சிக்கு சென்றார். பின் அங்கிருந்து லாகூர் சென்று தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கினார். அங்கிருந்து அவருக்கு விமானம் ஏற்பாடு செய்ய நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
இதை அடுத்து அவர் மீண்டும் லாகூரில் இருந்து கராச்சிக்கு சென்று இருக்கிறார். பின் அங்கிருந்து துபாய்க்கு விமானம் ஏறி இருக்கிறார். துபாயில் இருந்து தான் இலங்கை செல்ல முடியும் என்ற நிலையில் அங்கிருந்து அவர் விமானம் ஏறியது செப்டம்பர் 13ஆம் தேதி இரவு. அடுத்த நாள் மாலை தான் அவர் இலங்கை சென்று சேர்ந்தார், அதற்குள் இலங்கை - பாகிஸ்தான் போட்டி துவங்கி விட்டது.
அந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்தே வெளியேறியது. இந்த நிலையில், எதற்காக தஹானியை அழைத்தார்கள் என பலரும் கிண்டல் செய்யத் துவங்கி விட்டனர். மேலும், அவரை விமானம், விமானமாக ஏற வைத்து அனுப்ப அவர் மெஷின் அல்ல என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லத்திப் குரல் கொடுத்துள்ளார்.
இதில் மிகப் பெரிய நகைச்சுவை அவர் இன்றே மீண்டும் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்பது தான். அதை வைத்து குபீர் சிரிப்பை வரவழைக்கும் அளவுக்கு மீம்ஸ் போட்டு தெறிக்கவிட்டுள்ளனர் ரசிகர்கள்.
உலகிலேயே இது தான் குறைந்த நேரத்தில் செல்லும் பயணம் என குறிப்பிட்டுள்ளார் ஒரு ரசிகர்.
போவதும், வருவதும் தான் அவருக்கு வேலை என மீம் போட்டு கலாய்த்து இருக்கிறார்.
தஹானி இலங்கை சென்ற பின் அங்கே யாருமே இல்லை. எல்லாமே காலியாக இருந்தது எனக் கூறி ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.
ஒரே ஒரு நாள் தங்குறதுக்கு ஏன்பா இம்புட்டு லக்கேஜ் எடுத்துட்டு போற.. என ஒருவர் பாவமாக கேட்கிறார்.