சென்னை: சமீபத்தில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஷேக் ரஷீத் தன்னால் அடையாளம் காணப்பட்டு வளர்த்து விடப்பட்ட வீரர் என முன்னாள் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறியிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஷேக் ரஷீதை துவக்க வீரராக விளையாட வைத்தது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அறிமுகம் ஆனார். இதுவே அவருக்கு ஐபிஎல் அறிமுக போட்டியாகவும் அமைந்தது.

சுமார் மூன்று ஆண்டுகளாக தனது ஐபிஎல் அறிமுகத்திற்காக ஷேக் ரஷீத் காத்திருந்தார். தனது முதல் வாய்ப்பிலேயே அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 19 பந்துகளில் ஆறு பவுண்டரிகளை அடித்து 27 ரன்கள் சேர்த்திருந்தார் ஷேக் ரஷீத். இந்த நிலையில் எம்.எஸ்.கே. பிரசாத் அவரைப் பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
தான் எப்படி 11 வயதிலேயே ஆந்திரா கிரிக்கெட் அகாடமியில் அவரை தேர்வு செய்து வாய்ப்பளித்தேன் என்பது பற்றி கூறியிருக்கிறார். ஷேக் ரஷீத் பற்றி எம்.எஸ்.கே. பிரசாத் பேசியதாவது, "இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் 11 வயதில் ஷேக் ரஷீத்தின் திறமையை நான் அடையாளம் கண்டு அவரை ஆந்திரா கிரிக்கெட் அகாடமிக்கு தேர்வு செய்தேன். அவர் ஆந்திரா கிரிக்கெட் அகாடமியில் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக வளர்த்து எடுக்கப்பட்டார்."
"நாங்கள் அவரை 13 வயதிலேயே இங்கிலாந்துக்கு அனுப்பினோம். அவர் சுமார் இரண்டு மாதங்கள் அங்கே இருந்தார். அவர் அங்கு பல போட்டிகளில் விளையாடி நிறைய அனுபவத்தை பெற்றார். அதன் பிறகு படிப்படியாக முன்னேறி 14 வயதுக்கு உட்பட்ட அணி மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணிகளில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடினார்."
"அதன் பிறகு 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த ஆண்டு அவர் நான்கு போட்டிகளில் மூன்று சதங்களை அடித்தார். அவர் சேலஞ்சர்ஸ் டிராபியிலும் தொடர்ந்து இரண்டு சதங்களை அடித்தார். இந்த செயல்பாட்டின் காரணமாக 2022 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு விளையாடினார்."
"அப்போது ஒரு போட்டியில் சதம் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றார். அவர் இப்போது சிஎஸ்கே அணியில் அறிமுகமானதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமானதை விட எனக்கு வேறு என்ன பெரிய மகிழ்ச்சி இருக்க முடியும்? அவர் இன்னும் பல்வேறு உயரங்களுக்கு செல்ல வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன்" என்றார் எம்எஸ்கே பிரசாத்.