
ஸ்டெம்ப்புகளை உதைத்த ஷகிப்
முதலில் பேட்டிங் செய்த ஷகிப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. பிறகு, அபஹானி அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, வங்கதேச அணியின் தனது சக வீரரான முஷ்பிகுர் ரஹீமுக்கு அவர் பந்து வீசினார். அப்போது, ரஹீமுக்கு ஒரு எல்பிடபிள்யூ அப்பீலை ஷகிப் கேட்க, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், நிதானத்தை இழந்த அங்கேயே ஸ்டெம்ப்புகளை நோக்கி ஓங்கி உதைவிட பைல்ஸ்கள் தெறித்து சென்று விழுந்தன. அதோடு நிற்காமல், அம்பயருடன் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார்.

வீசி எறிந்த ஷகிப்
அதன் பிறகு, அபஹானி அணி 5.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட, அம்பயர் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். உடனே, பீல்டிங் செய்த இடத்தில் இருந்து வேக வேகமாக வந்த ஷகிப், அம்பயர் அருகில் இருந்த மூன்று ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடிங்கி, தரையில் வேகமாக தூக்கி எறிந்தார்.

ஒழுங்கு நடவடிக்கை
இதனால் வங்கதேச ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படும் ஷகிப், கிரிக்கெட் போட்டியில் ;இவ்வளவு மோசமாக நடந்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உள்ளூர் போட்டி என்றாலும், ஐசிசி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று தகவல்கள் வெளியாகின.

அவசர மன்னிப்பு
இதனால் உஷாரான ஷகிப் பேஸ்புக்கில் அவசரமாக ஒரு போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அன்புள்ள ரசிகர்களே, ஃபாலோயர்களே, எனது மனநிலையை இழந்து, கிரிக்கெட் பார்க்கும்.. குறிப்பாக வீட்டிலிருந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடையும் விதமாக நான் நடந்து கொண்டது குறித்து மிகவும் வருந்துகிறேன். என்னைப் போன்ற ஒரு அனுபவமிக்க வீரர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கக்கூடாது, ஆனால் சில சமயங்களில் இது போன்று துரதிர்ஷ்டவசமாக நடந்து விடுகிறது. எனது இந்த 'மனித பிழை'க்கு அணிகள், நிர்வாகம், போட்டி அதிகாரிகள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் நான் இதை மீண்டும் செய்ய மாட்டேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி மற்றும் எனது அன்புகள்" என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











