டாக்கா : சமூக வலைத்தளத்தில் லைக்ஸ் வாங்குவதற்காக பல ரசிகர்கள் ஏதேனும் ஒரு பிரபலத்துடன் செல்பி எடுத்து அதனை உடனே பதிவிட வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கிறார்கள். பிரபலங்களை பார்த்து அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு பதிலாக பல ரசிகர்கள் வேண்டுமென்றே அவர்களை தொந்தரவு செய்து முன் அனுமதி இன்றி செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள்.
இதனால் பல நட்சத்திரங்கள் கோபமடைவதுண்டு. எப்படி நமது தமிழ்நாட்டில் நடிகர் சிவகுமாருக்கு செல்ஃபி என்றால் பிடிக்காதோ அதை போல் வங்கதேசத்தில் உள்ள பிரபல கிரிக்கெட் வீரர் ஷாகிபுல் ஹசனுக்கும் செல்ஃபி என்றால் பிடிக்காமல் போய்விட்டது.

சிவகுமார் ஆவது செல்ஃபி எடுத்த போனை தட்டி விடுவது போன்ற செயலில் ஈடுபட்டார். 2021 சட்டமன்ற தேர்தலில் நடிகர் அஜித்துடன் செல்பி எடுக்க ரசிகர் ஒருவர் முயற்சி செய்தபோது, அஜித் அவருடைய போனை பிடுங்கி கொண்டார். இப்படித்தான் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் ஷாகிபுல் ஹசன் மைதானத்தில் நின்று ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென்று வந்த ரசிகர் ஒருவர் போட்டோ எடுக்க வந்தார். அப்போது ஷகிபுல் ஹசன் வேண்டாம் என்று கூறினார். எனினும் அதையும் மீறி அந்த ரசிகர் போட்டோ எடுக்க முயன்றார். இதனால் கடுப்பான ஷகிபுல் ஹசன் உடனே அந்த ரசிகரின் செல்போனை பிடுங்க முயன்றார். மேலும் ரசிகரின் கழுத்தில் கையை வைத்து அவரை அப்படியே தள்ளி அடிக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ரசிகர் மனம் உடைந்தவாறு மைதானத்தை விட்டு வெளியேறினார். ஷகிபுல் ஹசனின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ரசிகர்களை ஒழுங்காக மதிக்க தெரியாமல் ஷகிபுல் ஹசன் ஆத்திரத்துடன் நடந்து கொள்வதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டு உள்ளனர்.
அதேசமயம் ஷகிபுல் ஹசன் செய்தது சரிதான் என்றும் சில கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஷகிபுல் ஹசன் வேண்டாம் என்று சொல்லியும் செல்பி எடுக்க முயன்றது அந்த ரசிகர் செய்த தவறு என்று பலரும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். செல்பி மோகம் எப்போதுதான் விடும் என்றும், இது போல் பிரபலங்கள் நடந்து கொண்டால் தான் ரசிகர்களுக்கு அச்சமும் ஏற்படும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.