தாகா: வங்கதேச கிரிக்கெட் ஜாம்பவான் ஷகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. 37 வயதாகும் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆகஸ்ட் 2024 முதல் வங்கதேச நாட்டுக்கு செல்லாமல் வெவ்வேறு நாடுகளில் இருந்து வருகிறார்.
வங்கதேச நாட்டில் அரசு கவிழ்க்கப்பட்டது முதல் ஷகிப் அல் ஹசன் தனது நாட்டுக்கு செல்லாமல் தவிர்த்து வருகிறார். அவர் மீது செக் மோசடி வழக்கு ஒன்று கடந்த டிசம்பர் 18 அன்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு வங்கதேச நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டு இருந்தது.

ஜனவரி 19ஆம் தேதிக்குள் அவர் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், ஜனவரி 19 வரை அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜராகவில்லை என்பதால் ஷகிப் அல் ஹசனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அவர் தற்போது இங்கிலாந்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக கலவரம் நடந்த போது ஷகிப் அல் ஹசன் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதை முன் வைத்து நாட்டை விட்டு வெளியேறி இருந்தார். அவர் அப்போது ஆளுங்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சியினர் அவர் மீது கோபத்தில் இருந்ததால் அவர் நாடு திரும்பவில்லை.
அதன் பின் வங்கதேச கிரிக்கெட் அணியிலும் அவருக்கு இடம் அளிக்கப்படாத நிலையில் அவர் இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் விளையாடி வந்தார். அதில் அவரது பவுலிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து அவர் விதிகளின்படி பவுலிங் செய்கிறாரா? என்பதை அறிய பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் ஷகிப் அல் ஹசன் தோல்வி அடைந்ததார். அதனால், அவர் இனி பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக இருந்த அவருக்கு இந்த மோசமான நிலை ஏற்பட்டு சில நாட்களே ஆகும் நிலையில் தற்போது கைது உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.