தாகா : வங்கதேச அணியில் கடந்த சில மாதங்களாகவே பெரும் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.
முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் - ஷகிப் அல் ஹசன் இடையே இந்த மோதல் நடந்து வருகிறது.
தற்போது உலகக்கோப்பை அணித தேர்வின் போது தமிம் இக்பாலை அணியில் இருந்து நீக்கினால் தான் கேப்டன் பதவியில் இருப்பேன் என ஷகிப் அல் ஹசன் சொன்னதாகக் கூட தகவல் வெளியாகி இருந்தது.

அதைத் தொடர்ந்து தமிம் இக்பால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தமிம் இக்பால் என்ன நடந்தது என ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் சொன்ன கருத்துகளுக்கு தற்போது ஷகிப் அல் ஹசன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
என்ன நடந்தது? : கடந்த ஜூலை மாதம் ஆப்கானிஸ்தான் தொடரின் போது வங்கதேச அணியின் கேப்டனாக இருந்த தமிம் இக்பால் அணிக்குள் நடந்த கலகத்தால் பாதி தொடரில் தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார். அப்போது வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலையிட்டு, தமிம் இக்பாலை தொடர்ந்து விளையாடுமாறு கேட்டுக் கொண்டார்.
காயம் : அதன் பின் காயத்தால் போட்டிகளில் ஆட முடியாமல் இருந்தார் தமிம் இக்பால். அதே சமயம், அவர் தான் போட்டிகளில் ஆடுவேன் என உறுதியாக சொல்லாமல், வங்கதேச கிரிக்கெட் அமைப்பை இழுத்தடித்து வருவதாக கூறப்பட்டது.
கேப்டன் ஷகிப் மீது நம்பிக்கை : அதனை அடுத்து மூத்த வீரரும், சில போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்ட ஷகிப் அல் ஹசனை கேப்டனாக நியமித்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அனுப்பி வைத்தது வங்கதேச கிரிக்கெட் அமைப்பு.
அடுத்து நடந்த நியூசிலாந்து தொடரில் ஷகிப் அல் ஹசன் பங்கேற்கவில்லை. ஆனால், தமிம் இக்பால் இந்த தொடரில் பங்கேற்றார். ஒரு போட்டியில் ஆடிய பின் அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டது. அதனால் ,அவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து அணித் தேர்வின் போது ஷகிப் அல் ஹசன் - வங்கதேச கிரிக்கெட் அமைப்பு - தமிம் இக்பால் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது தமிம் இக்பால் உலகக்கோப்பை தொடரில் ஐந்து அல்லது ஆறு போட்டிகளில் மட்டுமே ஆடுவேன் எனக் கூறியதாக செய்திகள் வெளியாகின.
அதே போல, முழு உடற்தகுதி இல்லாத வீரரை உலகக்கோப்பைக்கு அழைத்துச் செல்ல மாட்டேன். அதற்கு பதில் நான் கேப்டன் பதவியில் இருந்து விலகி விடுகிறேன் என ஷகிப் அல் ஹசனும் கூறியதாக வேறு சில செய்திகள் வெளியாகின. இந்த இழுபறியின் முடிவில் தமிம் இக்பால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின் தன் நீக்கம் குறித்து வீடியோ வெளியிட்ட தமிம் இக்பால், தான் ஐந்து அல்லது ஆறு போட்டிகளில் தான் ஆடுவேன் என எப்போதும் கூறவில்லை என்றும், தான் தயாராக சில நாட்கள் ஆகும், ஆனால் உலகக்கோப்பைக்கு முன் தயாராகி விடுவேன் என்று தான் கூறினேன். ஆனால், யாரோ அதை மாற்றி ஊடகங்களில் கூறி இருக்கிறார்கள் என்றார்.
மேலும், தான் கிரிக்கெட் வாழ்வில் எப்போதும் துவக்க வீரராகவே ஆடி இருப்பதாகவும், தன்னை மிடில் ஆர்டரில் ஆட சம்மதித்தால் மட்டுமே அணியில் தேர்வு செய்வோம் என வங்கதேச கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள் கூறியதாகவும் அதன் காரணமாக தான் ஆடவில்லை எனக் கூறி விட்டதாகவும் தெரிவித்தார் தமிம் இக்பால்.
இதற்கு பதில் அளித்துள்ள ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பால்-இடம் யார் மிடில் ஆர்டரில் இறங்கினால் தான் அணியில் இடம் கிடைக்கும் என கூறினார்கள் என தெரியவில்லை. ஆனால், அவர்கள் அதிகாரப்பூர்வமாகவே அதை கூறி இருப்பார்கள். அவர்கள் அணியின் நன்மை கருதியே அதை கூறி இருக்கிறார்கள். அணியின் பேட்டிங் ஆர்டருக்காக அப்படி கூறுவது தவறான விஷயமா? ஏன் இப்படி ஒரு விஷயத்தை அவரிடம் நாம் சொல்லவே கூடாதா? நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நீங்கள் முக்கியமா? அல்லது அணி முக்கியமா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார் ஷகிப்.
மேலும், ரோஹித் சர்மா ஏழாம் இடத்தில் பேட்டிங் ஆடத் துவங்கி துவக்க வீரராக மாறி 10,000 ரன்களை கடந்து இருக்கிறார். ஆனால், இவர் சில சமயம் 3 - 4வது இடத்தில் பேட்டிங் ஆடினால் அது பெரிய பிரச்சனையா? இது சுத்த குழந்தைத்தனமாக இருக்கிறது. இந்த பேட் உங்களுடையது. அதை வைத்து நீங்கள் தான் ஆட வேண்டும். வேறு யாரும் உங்களுக்காக ஆட மாட்டார்கள் என்றார் ஷகிப்.
மேலும், ஒரு வீரர் அணிக்காக எந்த இடத்திலும் ஆட தயாராக இருக்க வேண்டும். அணிதான் முதலில். நீங்கள் 100 அல்லது 200 ரன்கள் எடுத்து அணி தோல்வி அடைவதில் எந்த லாபமும் இல்லை. உங்கள் தனிப்பட்ட சாதனைகளை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுக்கு பெயர் சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டும்தான் முக்கியமா? அவர் அணிக்கான வீரரே இல்லை. உங்கள் சொந்த ரெக்கார்டு, வெற்றி, புகழ், பெயர் இதற்காகவே ஆடுகிறீர்கள் என தமிம் இக்பாலை வெளுத்து வாங்கினார் கேப்டன் ஷகிப் அல் ஹசன்.