மிர்பூர்: இந்தியாவை அடுத்தடுத்து 2 போட்டிகளில் வீழ்த்தி தொடரையும் வென்ற வங்கதேச அணியின் வெற்றியால் குதூகலமடைந்த வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள், இந்திய ரசிகர் ஒருவரை சரமாரியாக அடித்து வெறித்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.
தாக்கப்பட்ட ரசிகர், பிரபலமான இந்திய ரசிகர் சுதிர் கெளதம் ஆவார். உலகம் முழுவதும் பிரபலமான ரசிகரும் கூட. இவரை இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் கூட பாராட்டிப் புகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2வது ஒரு நாள் போட்டி நேற்று மிர்பூரில் உள்ள ஷெர் பங்களா ஸ்டேடியத்தில் நடந்தது. அதில் இந்தியா தோல்வி அடைந்தது. இதையடுத்து வங்கதேச ரசிகர்கள் வெறித்தனமாக நடந்து கொண்டனர். அப்போதுதான் சுதிர் கெளதம் தாக்கப்பட்டார்.
இந்திய தேசியக் கொடியை ஆட்டியபடி போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார் கெளதம். போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததும் வங்கதேச ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதித்தனர். அப்போது ஸ்டேடியத்தை விட்டு வெளியே வந்த கெளதம் ஒரு ஆட்டோவில் ஏறி தனது இருப்பிடம் செல்ல முயன்றார். அவரைப் பார்த்த ரசிகர்கள், அவரை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கினர்.
சிலர் கெளதம் மீது கல்வீசியும் தாக்கியுள்ளனர். உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்றதற்குத் தாங்கள் பழிக்குப் பழிக்குத் தீர்த்து விட்டதாகவும் வெறித்தனமாக கூச்சலிட்டனர். மேலும் உள்ளே வைத்து பழி தீர்த்தோம். இப்போது வெளியே உன்னை அடித்து பழி தீர்க்கிறோம் என்று அவரைத் தாக்கினர்.
உடல் முழுவதும் மூவண்ண பெயிண்ட் அடித்துக் காணப்பட்ட கெளதம் கூறுகையில், இதுவரை இப்படிப்பட்ட ஒரு நிலையை நான் எங்கும் கண்டதில்லை. என்னை 2 போலீஸார் வந்து காப்பாற்றி மீட்டனர் என்றார்.
இந்தியா எங்கு விளையாடினாலும் அங்கு கெளதம் வந்து விடுவார். சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சியில் இடம் பெற்ற 10ம் எண்ணை தனது உடலில் பெயிண்ட் அடித்தபடி வந்து விடுவார். உலகக் கோப்பைத் தொடரின்போதும் இவர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வந்து இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது நினைவிருக்கலாம்.
வங்கதேசத்து தம்பிகளா.. வேணாமப்பா.. விட்டுடுங்க.. விளையாட்டுல எதற்கு கொலை வெறி!