
சறுக்கிய இந்தியா
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், முதல் ஓவரிலேயே ஆண்டர்சன் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார் ராகுல். ஒன் டவுன் இறங்கி 9 பந்துகளை சந்தித்த புஜாரா, ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். ஜேம்ஸ் ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கில் புஜாரா கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு, கேப்டன் விராட் கோலி 17 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டும் எடுத்து, ஆண்டர்சனின் லைன் அன்ட் லெந்த் பந்தில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த விக்கெட்டோடு சேர்த்து, டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சனிடம் 7வது முறையாக அவுட்டாகி வெளியேறினார் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் 3 இலக்க ரன்களை எட்ட முடியாமல்.. அதாவது சதம் அடிக்க முடியாமல், விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடும் 50வது போட்டி இதுவாகும். கடந்த இரண்டு ஆண்டு காலமாக 18 டெஸ்ட், 15 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி, ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மொத்தமாக 50 போட்டிகளில் அவர் ஒரு சதம் கூட அடிக்காமல் விளையாடி வருகிறார். ஒட்டுமொத்தமாக இந்தியா வெறும் 78 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்திருந்தது.

345 ரன்கள் முன்னிலை
நேற்று (ஆக.26) இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி, தனது முதல் விக்கெட்டாக ரோரி பர்ன்ஸை இழந்தது. ஷமி ஓவரில் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களில் போல்டானார். இதையடுத்து ஒன் டவுன் வீரராக டேவிட் மலன் களமிறங்கினார். பிறகு, ஹஸீப் ஹமீத் 68 ரன்களும், டேவிட் மலன் 70 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட் வழக்கம் போல, இந்திய பவுலர்களையும் துளியும் சட்டை செய்யாமல் 121 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்தது. இந்தியாவை விட 345 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

நம்பித் தான் ஆகணும்
இந்திய அணி தரப்பில் 26 ஓவர்கள் வீசி, 87 ரன்கள் விட்டுக் கொடுத்து ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பும்ராவுக்கு ஒரு விக்கெட் கிடைக்க, இஷாந்த் ஷர்மா விக்கெட்டே வீழ்த்த முடியாமல் திணறினார். இந்த நிலையில், இந்தியா இன்று 3வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது. இந்நிலையில், நேற்று 2ம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஷமி, "அணித் தேர்வு குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இது நிர்வாகத்தின் முடிவு. ஆனால், களத்தில் இருக்கும் 11 வீரர்களின் அவரவர்கள் வேலையைச் செய்ய வேண்டும். நாம் திரும்பி வந்து இந்த போட்டியை வெல்ல வேண்டும். அணித் தேர்வை பற்றியே எப்போதும் யோசித்துக் கொண்டிருக்க முடியாது. நிர்வாகம் தேர்வு செய்துள்ள 11 வீரர்களையும் நாம் நம்பித்தான் ஆக வேண்டும். நல்ல முடிவை ஏற்படுத்திக் கொடுக்கும் திறமை உள்ள வீரர்கள் என்பதை நம்ப வேண்டும்" என்றார்.

திறமை மீது நம்பிக்கை
பிறகு, அவரிடம் போட்டியில் இந்தியா தோல்வி முகத்தில் இருக்கிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஷமி, நாங்கள் அப்படி நினைக்கவில்லை. நாங்கள் மூன்று நாளிலும் டெஸ்ட் போட்டியை முடித்திருக்கிறோம். இரண்டு நாளிலும் முடித்திருக்கிறோம். உங்களுக்கு என்று ஒரு மோசமான நாள் வரும். ஆனால், அந்த ஒரு நாள் எங்கள் மன உறுதியை குலைத்துவிடும் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த தொடரில் இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ளன. நாம் ஏற்கனவே 1-0 என்று முன்னிலையில் இருக்கிறோம். நாம் நமது திறமை மீது நம்பிக்கை வைத்து மீண்டு வர வேண்டும்" என்று ஷமி கூறியுள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
ஷமி சொன்ன அனைத்தும் சரி தான். ஆனால், அவர் இந்த மேட்ச் அவ்வளவு தான் என்பது போல், இன்னும் 2 டெஸ்ட் மேட்ச் இருக்கு. பார்த்துக்கலாம் என்ற ரீதியில் பதில் அளித்திருக்கிறார். இது அவருடைய தனிப்பட்ட கருத்து தான். ஆனால், 'அடுத்த 2 மேட்ச் இருக்கு. பார்த்துக்கலாம்' என்று அவர் கூறியது தான் நெருடலை ஏற்படுத்துகிறது. இந்த 3வது டெஸ்ட் போட்டியில் இன்னும் 3 நாட்கள் மீதமிருந்தது. இங்கிலாந்து இந்த போட்டியில் பெரும் முன்னிலையில் இருந்தாலும், மீதமுள்ள இந்த 3 நாட்களில் இந்தியா போராடி கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேசமயம், திறமை மீது நம்பிக்கை வைத்து நாம் மீண்டு வர வேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.


Click it and Unblock the Notifications