கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் தனிப்பட்ட வாழ்க்கை, கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறது. ஷமி, 2014-ல் ஹசின் ஜஹான் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2018-ல் இருவரும் பிரிந்து வாழத் தொடங்கினர்.
முகமது ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதை செய்ததாக ஹசின் ஜஹான் குற்றம் சாட்டினார். சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி சேனல்களில் தொடர்ந்து ஷமிக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில், 'நியூஸ் 24' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், முகமது ஷமி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். குறிப்பாக, தனது திருமண வாழ்க்கை குறித்துப் பரவிவரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசியுள்ளார்.
ஹசின் ஜஹானைத் திருமணம் செய்துகொண்டது குறித்து வருந்துகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "அதை விடுங்கள். நான் கடந்த காலத்தைப் பற்றி ஒருபோதும் வருந்துவதில்லை. நடந்தது நடந்துவிட்டது. அதற்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை, என்னையும் சேர்த்துத்தான். என் முழு கவனமும் இப்போது கிரிக்கெட்டில் மட்டுமே இருக்கிறது. எனக்கு இந்த சர்ச்சைகள் தேவையில்லை" என்று முகமது ஷமி பதிலளித்துள்ளார்.
ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாஹல் போன்ற மற்ற கிரிக்கெட் வீரர்களின் திருமண வாழ்க்கையிலும் இதுபோன்ற சிக்கல்கள் எழுந்துள்ளது குறித்துக் கேட்டபோது, "அதுபற்றி விசாரிப்பது உங்கள் வேலை. எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? மறுபக்கத்தையும் பாருங்கள். நான் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகிறேன், சர்ச்சைகளில் அல்ல" என்று கூறியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, துலீப் டிராபி தொடரில் கிழக்கு மண்டல அணிக்காக விளையாடி, மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பியுள்ளார் முகமது ஷமி. 2025 ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்த ஷமி, தற்போது மீண்டும் தனது ஃபார்மை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
முகமது ஷமியின் இந்த வெளிப்படையான பேட்டி, அவர் மீதான வதந்திகளுக்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சர்ச்சைகளைத் தவிர்த்து, மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.