லீட்ஸ் : டி20 பிளாஸ்ட் தொடரில் நோ-பால் பந்தில் ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் செய்யப்பட்ட போதும், பேட்ஸ்மேனுக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் என்சிசி விதியில் கூறியிருப்பது என்ன என்றும், நடுவர் எவ்வாறு நாட் அவுட் கொடுக்கப்பட்டு பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இங்கிலாந்து நடந்து வரும் டி20 பிளாஸ்ட் லீக் தொடரில் யார்க்ஷைர் - லாங்கஷைர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய யார்க்ஷைர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஷான் மசூத் 41 பந்துகளில் 61 ரன்களை சேர்த்தார்.

இந்த இன்னிங்ஸின் 15வது ஓவரில் மசூத் - ஜோ ரூட் இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அந்த ஓவரை வீசிய ஜாக் பிளேதர்விக் பவுலிங்கில் ஸ்வீப் ஷாட் ஆட ஷான் மசூத் முயன்றார். அப்போது அவரின் கால்கள் ஸ்டம்பில் பட, பெயில்ஸ் கீழே விழுந்தது. இதனால் அவுட் என்று நினைத்த ஷான் மசூத், நிதானமாக நடந்தார். ஆனால் அந்த பந்தை நடுவர் நோ-பால் என்று அறிவித்தார்.
இதனை கவனிக்காத ஷான் மசூத் க்ரீஸில் இருந்து வெளியில் நடக்க, பின்னர் த்ரோவை எறிவதை அறிந்து வேகமாக ஓடினார். இருந்தாலும் அவரால் க்ரீஸை எட்ட முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரே பந்தில் ஷான் மசூத் இருமுறை அவுட் செய்யப்பட்டுள்ளார். ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் செய்யப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது.
ஏனென்றால் ஷான் மசூத் எதிரணி கேப்டன் மற்றும் நடுவர் தரப்பிடம் நோ-பால் சிக்னலை கவனிக்கவில்லை என்று கூறினார். நோ-பால் சிக்னலை கவனிக்காததால், ஹிட் விக்கெட் என்று நினைத்து வெளியேற முயற்சித்ததாக கூறினார். ஏற்கனவே நோ-பால் கொடுக்கப்பட்டதால், ஹிட் விக்கெட் செல்லாமல் போனது. இதனால் கள நடுவர் உடனடியாக ரன் அவுட்டை பார்த்தார்.
எம்சிசி விதிகளின் படி ஒரு பேட்ஸ்மேன் தவறான புரிதல் காரணமாக க்ரீஸில் இருந்து வெளியேறினால், நடுவர் அந்த பேட்ஸ்மேனை பேட்டிங் செய்யவும் அழைக்கலாம். அல்லது அந்த பந்தை டெட் பாலாகவும் அறிவிக்கலாம். இதன் காரணமாக ஷான் மசூத் மீண்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. கிரிக்கெட்டின் இந்த விதி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.