கோரத் தாண்டவம்
கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடுகிறது. உலகில் இரண்டே நாட்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தினமும் கொரோனா தொற்று மற்றும் அதனால் பலியாகும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
பெரும் பதற்றம்
ஆஸ்திரேலியாவில் இதுவரை 2400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் மக்கள் இடையே துவக்கம் முதலே கொரோனா வைரஸ் காரணமாக பெரும் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக டாய்லெட் பேப்பருக்கு!!
டாய்லெட் பேப்பர் பீதி
ஆம், ஆஸ்திரேலியாவில் டாய்லெட் பேப்பர் உற்பத்தி குறைவு. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி என பல வகைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவில் டாய்லெட் பேப்பர் கிடைக்காது என்ற வதந்தி பரவி உள்ளது.
டாய்லெட் பேப்பருக்கு அடிதடி
இந்தியாவில் காய்கறி, மளிகை பொருட்களை வழித்து துடைத்து மக்கள் வாங்கி வருவது போல, ஆஸ்திரேலியாவில் டாய்லெட் பேப்பரை வாங்கிக் குவித்து வருகிறார்கள். சில இடங்களில் அடிதடியும் நடந்து வருகிறது. அதே சமயம், அங்கே இன்னும் ஊரடங்கு போன்ற விதிகள் அமலில் இல்லை.
பிரதமர் பேட்டி
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தி, கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியாவில் பரவாமல் இருக்க என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றி பேட்டி அளித்தார் அந்த நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன். அதில் மோசமாக குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
பள்ளிகள் இயங்கலாம்!?
பலரும் எதிர்பார்த்தது போல, ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்காத அவர் பள்ளிகள் இயங்கலாம், ஆனால், துக்க நிகழ்ச்சியில் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது என கூறி உள்ளார். அதே போல, உடற்பயிற்சி செய்யும் போது உடன் 10 பேர் வரை இருக்கலாம் என்றும், ஆனால், திருமண நிகழ்ச்சியில் 5 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என கூறி உள்ளார்.
முடி திருத்தும் கடைகள் இயங்கலாம்
மக்களுக்கு அத்தியாவசியமான தொழில்கள், கடைகள் இயங்கலாம் என கூறி உள்ளார். அதில் வேடிக்கையாக ஆடைகள் விற்கும் கடைகள், முடி திருத்தும் கடைகள் ஆகியவை இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியர்கள் இடையே கடும் குழப்பத்தை உண்டாக்கி உள்ளது.
|
ஷேன் வார்னே கிண்டல்
ஆஸ்திரேலிய பிரதமர் மேல் பலரும் கடும் கோபத்தில் உள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தன் கோபத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர், "பிரதமரின் பேச்சை கேட்டு எனக்கு புரிந்தது இது தான் - "அது தேவையில்லை என நாம் கருதும் வரை அது தேவை. அதன் பின் நிச்சயமாக அது தேவையில்லை. இதை விட தெளிவாக சொல்ல முடியாது" என கிண்டல் செய்துள்ளார்.
சரமாரி திட்டு
மேலும், "அப்புறம் மக்கள் கடைத் தெருவில் புதிய ஷர்ட் வாங்கலாமா? என்ன இது (ஆங்கில கெட்ட வார்த்தை)? பிரதமர் அதிர்ச்சி அளித்துள்ளார். நாம் நிச்சயம் லாக்டவுனில் இருக்க வேண்டும்" எனக் கூறி உள்ளார் ஷேன் வார்னே.
அரசியல் ஆன பதிவு
ஷேன் வார்னேவின் இந்த பதிவு அரசியலாகவும் மாறி உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பில் ஷார்ட்டன் ஷேன் வார்னே கருத்தை ஆதரித்து. "சிறந்த ஆஸ்திரேலியரிடம் இருந்து வந்துள்ள அறிவார்ந்த வார்த்தைகள்" என தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய மக்கள் இப்போது தங்களை தாங்களே சுய ஊரடங்கு செய்து கொண்டு உள்ளனர்.