கொரோனா வைரஸ் பரவல்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் சுமார் 180 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் பாதிப்பு
ஆஸ்திரேலியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கே 2766 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 660 பேருக்கும் மேல் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு இல்லை
ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. எனினும், கூட்டமாக கூட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும், மக்கள் தாங்களாகவே வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். ஷேன் வார்னேவும் தன் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்.
சரக்கு வாங்கிய வார்னே
நம் ஊரில் மக்கள் 21 நாட்களுக்கு வீட்டில் முடங்கி இருக்கப் போகிறோம் என தெரிந்த உடன் மளிகை மற்றும் காய்கறி பொருட்களை அள்ளிச் சென்றனர். ஆனால், ஷேன் வார்னே தன் வீட்டில் சரக்கை வாங்கி குவித்துள்ளார்.
பாட்டில்கள்
அவரது வீட்டில் இருக்கும் பார் (Bar) மற்றும் பிரிட்ஜ் அனைத்தும் பாட்டில்களால் நிரம்பி உள்ளது. அதை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக காட்டி இருக்கிறார் ஷேன் வார்னே. தனிமையில் ஜாலியாக இருக்க இப்படி ஒரு ஏற்பாடு போல.
உதவி செய்யும் வார்னே
இப்படி ஜாலி ஒருபுறம் இருந்தாலும், ஷேன் வார்னேவின் ஜின் வகை மதுபானம் தயாரிக்கும் ஆலையில் மருத்துவர்களுக்கு உதவும் வகையில் சானிடைசர் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பெரிய உதவியை அவர் செய்து வருகிறார்.
பற்றாக்குறை
கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் சானிடைசர்களுக்கு உலகம் முழுவதும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த சமயத்தில், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு சானிடைசர் தயாரித்து வழங்கி வருகிறார்.
சானிடைசர் தயாரிப்பு
தன் மதுபான ஆலையில் ஜின் தயாரிப்பை நிறுத்தி விட்டு, சிறிய மாற்றம் செய்து 70 சதவீத ஆல்கஹால் கொண்ட மருத்துவ தரத்திலான சானிடைசர் தயாரித்து, அதை உற்பத்தி விலைக்கே அந்த மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறார்.
குழப்பமான விதிகள்
கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வோடு இருக்கும் ஷேன் வார்னே, ஆஸ்திரேலிய பிரதமர் முன்னெச்சரிக்கை கொடுத்து முன்னுக்கு பின் முரணான விதிகளை அமல்படுத்திய போது பொங்கி எழுந்தார். ஆஸ்திரேலிய பிரதமர் பள்ளிகள் இயங்கும், முடி திருத்தும் கடைகள், ஆடைகள் விற்கும் கடைகள் இயங்கலாம் எனவும் கூறி இருந்தார்.
பொங்கி எழுந்தார்
ஆஸ்திரேலிய பிரதமரின் அந்த அறிவிப்புகளை எதிர்த்து பொங்கி எழுந்தார் ஷேன் வார்னே. இப்போது நாம் ஊரடங்கில் இருப்பது தான் முக்கியம் என தெரிவித்தார் அவர். அவரது கருத்துக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.