சிட்னி: 2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.63 பில்லியன் டாலர் அதாவது சுமார் 15,308 கோடி ரூபாய் தொகைக்கு அமெரிக்காவைச் சேர்ந்த கல் சோமானி தலைமையிலான முதலீட்டுக் குழுவிற்கு விற்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான விற்பனை மூலம் மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் சொத்து மதிப்பு அவர் இறந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகமான போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் என முழு பொறுப்பையும் ஷேன் வார்னே ஏற்றார். அப்போது அவருக்கு 6,57,000 டாலர் அதாவது தற்போதைய மதிப்பில் 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. இது தவிர அவர் விளையாடும் ஒவ்வொரு ஆண்டிற்கும் 0.75 சதவீத அணி பங்குகளை உரிமையாகப் பெறும் வகையில் ஒரு தனித்துவமான ஒப்பந்தத்தை அவர் செய்திருந்தார். முதல் சீசனிலேயே ராஜஸ்தான் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த அவர், மொத்தம் 4 சீசன்கள் விளையாடி அணியின் 3 சதவீத பங்குகளை தனது வசமாக்கினார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அணியின் மதிப்பு 400 மில்லியன் டாலராக இருந்த போது, வார்னேவின் பங்குகளின் மதிப்பு 12 மில்லியன் டாலராக இருந்தது. தனது பங்குகளின் மதிப்பு எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் உயரும் என்பதை ஷேன் வார்னே அப்போதே கணித்திருந்தார். அதன்படியே, தற்போது அந்த அணியின் மதிப்பு 1.63 பில்லியன் டாலராக உச்சத்தை தொட்டுள்ளதால், வார்னேவின் 3 சதவீத பங்குகளின் மதிப்பு 48.9 மில்லியன் டாலராக அதாவது சுமார் 460 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷேன் வார்னே காலமான போது, தனது குடும்பத்திற்கு 20.7 மில்லியன் டாலர் சொத்துக்களை விட்டுச் சென்றார். அது அவரது 3 குழந்தைகளுக்கு தலா 6.41 மில்லியன் டாலர் என்ற கணக்கில் பிரிக்கப்பட்டது. தற்போதைய புதிய விற்பனை ஒப்பந்தத்தின் மூலம் வார்னேவின் பங்குகளின் மதிப்பு மட்டும் சுமார் 18.9 மில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இது அவர் இறந்தபோது இருந்த ஒட்டுமொத்த சொத்து மதிப்பான 20.7 மில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் சுமார் 91 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் வார்னேவின் சொத்து மதிப்பு தற்போது கிட்டத்தட்ட இருமடங்காக மாறியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த விற்பனைக்கு பிசிசிஐ ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது. 2026 ஐபிஎல் சீசன் முடிந்த பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
