சுயசரிதை புத்தகம்
ஷேன் வார்னே மற்றும் ஸ்டீவ் வாஹ், இருவரும் ஒன்றாக கிரிக்கெட் ஆடிய காலத்தில் இருவருக்கும் ஏதோ மனக்கசப்பு உள்ளது என மற்றவர்களுக்கு தெரியும், ஆனால், அதன் பின்னணியை தன் சுய சரிதை புத்தகமான "நோ ஸ்பின்"இல் புட்டு புட்டு வைத்துள்ளார் வார்னே.
ஸ்டீவ் வாஹ் எடுத்த முடிவு
1999இல் நடந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியை இழந்தது. இரண்டாம் டெஸ்ட்டுக்கு முன் அணித்தேர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் வாஹ், துணை கேப்டனான ஷேன் வார்னேவை அடுத்த டெஸ்டில் நீக்குவது பற்றி பயிற்சியாளர் ஜெஃப் மார்ஷ் முன், வார்னேவிடம் கூறியுள்ளார். காரணம், வார்னே அப்போது தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்த சமயம் என்பதால், சரியான பார்மில் இல்லை. வார்னே இதை ஒப்புக் கொண்டு, ஆனாலும், அடுத்த போட்டியில் தான் மீண்டு விடுவேன், என கூறியுள்ளார்.
பார்டர் ஆதரவு
பயிற்சியாளர் மார்ஷ், வார்னே இரண்டாம் டெஸ்டில் ஆட வேண்டும் என கூற, முடிவெடுப்பதில் சிக்கல் எழுந்தது. இந்த முடிவை எடுக்க ஆஸ்திரலிய அணியின் மற்றொரு தலைசிறந்த முன்னாள் கேப்டன் ஆலன் பார்டரை அழைத்தனர். அவர் இப்படி ஒரு பேச்சு நடப்பதை கண்டு அதிர்ந்து போய், "அடக் கடவுளே! நான் நிச்சயம் வார்னேவை தான் ஆதரிப்பேன். அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு எவ்வளவு செய்திருக்கிறார். இந்த நேரத்தில் நாம் அவருக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்" என கூறி இருக்கிறார். அதையும் மறுத்த ஸ்டீவ் வாஹ், வார்னேவை அணியில் இருந்து அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு நீக்கி விட்டார். தான் மிகவும் மதிப்பு வைத்திருந்த ஒருவர் இப்படி தன்னை நம்பாமல் கழுத்தறுத்து விட்டார் என வெறுப்படைந்த வார்னே, அப்போதிருந்து அவர் மேல் வன்மத்தை வளர்த்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஹெல்மெட் போட்டுக்கொண்டு பீல்டிங்
அடுத்து ஒருமுறை ஸ்டீவ் வாஹ் காயதில் இருந்த போது அடுத்த போட்டியில் ஆட வேண்டும் என பிடிவாதம் பிடித்துள்ளார். காயத்தோடு எப்படி பீல்டிங் செய்வீர்கள் என வார்னே கேட்டதற்கு "ஹெல்மெட்" அணிந்து கொண்டு போட்டி முழுவதும் பீல்டிங் செய்வேன் என பிடிவாதம் பிடித்துள்ளார் ஸ்டீவ் வாஹ். தன்னை ஸ்டீவ் வாஹ் ஆதரிக்காததால், இப்போது வார்னே அவரை ஆதரிக்காமல் சண்டை போட்டுள்ளார்.
பணமாக்கும் முயற்சியா?
இது போல ஸ்டீவ் வாஹ் மீது தனக்கு இருக்கும் வன்மத்தை எல்லாம் இந்த சுயசரிதை புத்தக்கத்தில் கொட்டியுள்ளார் வார்னே. எப்படியோ, தான் போட்ட சண்டைகளை கூட பணமாக்கி விடலாம் என வார்னே முயற்சி செய்து வருகிறார் என தெரிகிறது. ஆஸ்திரலிய கிரிக்கெட் இன்றைக்கு மோசமாக இருக்கும் நிலையில் இப்படி ஜாம்பவான் வீரர்கள் இருவர் போட்டுக்கொண்ட சண்டை வெளியே வருவது மேலும் பாதிப்பை தான் ஏற்படுத்தும்.