மும்பை: டி20 உலக கோப்பை தொடருடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த வருட இறுதியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் வாட்சன். இந்நிலையில், உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியோடு, அனைத்து வகை கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஷேன் வாட்சன் இன்று அறிவித்துள்ளார். வாட்சன் கடந்த செப்டம்பர் முதல் ஒருநாள் போட்டிகள் எதிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள டி20 சூப்பர்-10 போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றால், இந்தியா அரையிறுதிக்கும், ஆஸ்திரேலியா வீடு திரும்புவதற்கும் தகுதி பெறும். எனவே அந்த போட்டி வாட்சனின் கடைசி போட்டியாக அமையலாம்.
2002 மார்ச் 24ம் தேதி சென்சூரியனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல்முறையாக சர்வதேச போட்டிகளில் களமிறங்கினார் 20 வயதாக இருந்த வாட்சன். 14 வருடங்கள் கழித்து, தனது 34வது வயதில், அதே மார்ச் 24ம் தேதியன்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
ஆல்ரவுண்டரான வாட்சன், ஆஸ்திரேலியாவுக்காக 190 ஒருநாள் போடடிகளில் ஆடி 5757 ரன்களையும், 168 விக்கெட்டுகளையும் குவித்துல்ளார். வங்கதேசத்துக்கு எதிராக 2011ல் இவர் விளாசிய 185 ரன்தான், ஒரு போட்டியில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த தனிப்பட்ட வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர்.
56 டி20 போட்டிகளில் ஆடியுள்ள வாட்சன் 1400 ரன்களையும் 46 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார். அதேபோல 59 டெஸ்ட் மேட்சுகளில் ஆடியுள்ள வாட்சன் 3731 ரன்களையும், 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.