
ரஹானே ஜீரோ
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா, 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் சேர்த்தது. அதாவது இந்தியாவை விட 99 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், நேற்று மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ரவீந்திர ஜடேஜா க்றிஸ் வோக்ஸ் ஓவரில் 17 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். பிறகு களமிறங்கிய துணை கேப்டன் ரஹானே வழக்கம் போல் தன் வேலையைக் காட்டினார். 8 பந்துகளை சந்தித்த ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அவரும் க்றிஸ் வோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

கோலி அவுட்
பிறகு கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் ரிஷப் பண்ட். அப்போது, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மொயீன் அலியை பந்து வீச அழைத்தார். இதற்கு உடனடி பலன் கிடைத்தது. கிரெய்க் ஓவர்டன் மட்டும் ஸ்லிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார். மொயீன் அலி பந்தை ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீச, அதனை தன் பேட் கொண்டு டிஃபன்ட் செய்தார் கோலி. ஆனால், பந்து பேட்டின் வெளிப்புறம் பட்டு ஓவர்டன் கைகளில் கேட்ச் ஆனது. இதனால் அவர் 44 ரன்களில் வெளியேறினார். பிறகு ரிஷப் பண்ட் - ஷர்துல் தாகூர் பிரமாதமான பார்ட்னர்ஷி அமைத்தனர்.

தூள் கிளப்பிய ஷர்துல்
இங்கிலாந்து பவுலிங்கை மிக லாவகமாக இருவரும் எதிர்கொண்டனர். அது என்னமோ தெரியவில்லை.. இந்தியாவின் மற்ற பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை பதட்டத்துடன் எதிர்கொள்ள, ஷர்துல் தாகூர் மட்டும் ஏதோ, ஜிம்பாப்வே பவுலர்களை டீல் செய்வது போல், கேஷுவலாக எதிர்கொள்கிறார். அது என்ன மாயம் என்று தெரியவில்லை. ஆண்டர்சன், ராபின்சன் என்று எந்த பவுலர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி பவுண்டரிகளை பறக்க விட்டார். சும்மா கன்னா பின்னாவென்று அவர் சுத்தவில்லை. எல்லாமே நேர்த்தியான ஷாட்ஸ்கள், வியூகம் அமைத்து விளையாடினார். ரிஷப் பண்ட் அடக்கி வாசிக்க, ஷர்துல் தூள் கிளப்பினார்.

8வது வீரராக சாதனை
பிறகு 60 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து, இரண்டு முறையும் இக்கட்டான நிலையில் இருந்து இந்தியாவை கரை சேர்த்துள்ளார். இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 8வது விக்கெட்டுக்கு களமிறங்கி ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த 6வது வீரர் எனும் சாதனையை ஷர்துல் படைத்துள்ளார். இதற்கு முன், ஹர்பஜன் சிங் மற்றும் ரிதிமான் சாஹா ஆகியோர் 8வது பேட்ஸ்மேனாக களமிறங்கி, இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்துள்ளனர். உலகளவில் 6வது வீரர் என்ற பெருமையையும், இந்திய அளவில் 3வது வீரர் எனும் பெருமையையும் ஷர்துல் பெற்றிருக்கிறார். பிறகு, ஜோ ரூட் ஓவரில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஷர்துல் வெளியேறினார்.


Click it and Unblock the Notifications