இந்தூர் : இந்திய அணியில் கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் உலகக்கோப்பைக்கு தயார் நிலையில் உள்ளனர். பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் ஐயரும், பந்துவீச்சில் ஷர்துல் தாக்குரும் மட்டுமே சரியாக தங்களை நிரூபிக்காமல் போக்கு காட்டி வருகிறார்கள்.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் இருப்பதால் இந்திய அணிக்கு அந்த விஷயத்தில் கவலை இல்லை. ஆனால், ஷர்துல் தாக்குர் விவகாரம் நாளுக்கு மால் மோசமாகிக் கொண்டே போகிறது.

உலகக்கோப்பை தொடங்கும் முன் சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதால் அவருக்கு ஆஸ்திரேலிய தொடரின் இரண்டாவது போட்டியே கூட கடைசி வாய்ப்பாக இருக்கலாம். அப்படி என்ன தான் சொதப்பினார்?
ஷர்துல் தாக்குர் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பார் என்பது அனைவருக்குமே தெரியும். அவர் இதுவரை ஆடிய போட்டிகளின் புள்ளிவிவரத்தை எடுத்துப் பார்த்தாலே அவர் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் கொடுக்கிறார் என்பது தெரியும்.
ஆனால், பல பந்துவீச்சாளர்களிடம் இல்லாத திறமை ஒன்று அவரிடம் இருந்தது. அவர் எந்த நேரத்தில் பந்தை கொடுத்தாலும் ஒன்று, இரண்டு விக்கெட்களை வீழ்த்தி விடுவார். அந்த அளவுக்கு திறமை வாய்ந்தவர். அதன் காரணமாகவே அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். மேலும், இவர் பேட்டிங்கில் ஓரளவு ரன்கள் சேர்ப்பார்.
ஆசிய கோப்பை தொடரிலும் கூட பந்துவீச்சில் அவர் அதிக ரன்களை கொடுத்தாலும் போட்டிகளில் விக்கெட்களை வீழ்த்தி அணிக்கு உதவியதால் தலைதப்பி அணியில் தொடர்ந்தார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவரது நிலை இன்னும் மோசமாக இருந்தது.அந்தப் போட்டியில் இந்திய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 5 ரன்களை ஒட்டியே ரன்களை விட்டுக் கொடுத்தனர்.
ஆனால், ஷர்துல் தாக்குர் 10 ஓவர்களில் 78 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதனால், அவரை உலகக்கோப்பை தொடருக்கான அணியில் மாற்று வீரராக வைத்திருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் எந்த வேகப் பந்து வீச்சாளருக்காவது காயம் ஏற்பட்டால், ஷர்துலை ஆட வைக்க வேண்டும். அப்போது அவர் இப்படி ரன்களை வாரிக் கொடுத்தால் அது தோல்விக்கு முக்கிய காரணமாக மாறலாம்.
இந்த நிலையில், இந்திய அணி பிரசித் கிருஷ்ணா என்ற இளம் வேகப் பந்துவீச்சாளரையும் ஆஸ்திரேலிய தொடரில் மாற்று வீரராக வைத்துள்ளது. அவர் தாக்குர் அளவுக்கு பேட்டிங்கில் கை கொடுப்பாரா? என்பதே ஒரே சந்தேகம்.
ஆனால், தாக்குரின் பேட்டிங் திறமையை விட அவர் அதிக ரன்களை கொடுப்பதால் போட்டிகளில் தோல்வி ஏற்படும் அபாயம் உண்டு. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தாக்குர் ரன்களை கொடுப்பதில் சிக்கனமாக இருக்க வேண்டும், விக்கெட்டும் வீழ்த்த வேண்டும். அது நடக்கவில்லை என்றால், அவர் உலகக்கோப்பை அணியில் அவர் நீடிப்பது சந்தேகமே.