மும்பை: இந்திய அணியில் இளம் வீரர் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அனுபவ வீரர் முகமது ஷமியை களமிறக்க வேண்டும் என்று அனுபவ வீரர் பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் மற்றொரு முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூர் 10 ஓவர்களில் 78 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. இதனால் இந்திய பிளேயிங் லெவனில் முகமது ஷமி - ஷர்துல் தாக்கூர் இருவரில் யார் சிறந்த வீரர்கள் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.

நடப்பாண்டில் இந்திய அணியின் இளம் வீரர் ஷர்துல் தாக்கூர் 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவரின் பவுலிங் எகனாமி 6.21ஆக உள்ளது. அதேபோல் பேட்டிங்கை பொறுத்தவரை 6 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 59 ரன்களை சேர்த்திருக்கிறார். அவரின் பேட்டிங் சராசரி 9.83ஆக உள்ளது. இதனால் ஷர்துல் தாக்கூரை எப்படி ஆல்ரவுண்டராக பார்க்க முடியும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய வீரர் பியூஷ் சாவ்லா பேசுகையில், ஷர்துல் தாக்கூரின் பேட்டிங் பற்றி எடுத்துக் கொண்டால், அவரால் 20 பந்துகளில் அதிரடியாக 30 ரன்களோ, 40 ரன்களோ அடிக்கக் கூடிய வீரர் அல்ல. அவரால் 20 பந்துகளில் அதிகபட்சமாக 25 ரன்கள் வரை சேர்க்க முடியும். அதேபோல் பவுலிங்கை பற்றி எடுத்துக் கொண்டால், நிச்சயம் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஆனால் எகனாமி ரேட் எப்போதும் அதிகமாகவே தான் இருந்துள்ளது. இதனை இந்திய ஆடுகளங்களோடு ஒப்பிட வேண்டும். உலகக்கோப்பை தொடருக்கு பெரும்பாலும் பிளாட் பிட்ச்கள் தான் அமைக்கப்படும். பிளாட் பிட்ச்களில் ஷர்துல் தாக்கூர் கட்டுப்பாடாக வீசுவாரா என்பது கேள்வி தான். அதனால் இந்திய அணி முழுமையான பந்துவீச்சாளருடன் களமிறங்குவதே நல்லது என்று தெரிவித்துள்ளார்.